12 ஆண்டுகளுக்கு பிறகு அறிவாலயம் வந்த வைகோ... மகிழ்ச்சியோடு செல்வதாக புன்னகை பேட்டி!
திமுக தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்ணா அறிவாலயம் வந்துள்ளார்.
Recommended Video
சென்னை : பேருந்து கட்டண உயர்வை கண்டித்து அடுத்தகட்டமாக போராட்டம் நடத்துவது குறித்து திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக 12 ஆண்டுகளுக்குப் பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்ணா அறிவாலயம் வந்திருந்தார்.
திமுகவால் வளர்க்கப்பட்ட வைகோ, கட்சியில் இருந்து தூக்கி வீசப்பட்ட போது கடுமையான அதிருப்தியோடு மதிமுகவை தொடங்கினார். மதிமுகவை மிகப்பெரிய இயக்கமாக கொண்டுவந்த வைகோ தேர்தல் சமயத்தில் அதிமுக, திமுகவுடன் கூட்டணியில் இருந்தார். கடைசியாக 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் சேர்ந்து தேர்தல் களத்தை சந்தித்தார் வைகோ.
தொடர்ந்து அதிமுகவுடன் நட்பு பாராட்டி வந்த வைகோ கடந்த சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது கூட்டணியை உருவாக்கியது. திமுக, அதிமுக அல்லாமல் விடுதலை சிறுத்தைகள்,இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளோடு, தேமுதிகவும் இணைந்து உருவாக்கிய மக்கள் நல கூட்டணி தேர்தலை சந்தித்தது. ஆனால் இந்த கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவே தேர்தலில் கிடைத்தது, இறுதியில் வைகோ மக்கள் நலக் கூட்டணியை விட்டு வெளியேற கொஞ்சம் கொஞ்சமாக அந்த கூட்டணி உடைந்தது.
முரசொலி விழாவில் பங்கேற்ற வைகோ
இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் தமிதுக அரசியல் களத்தில் மாற்றங்களை ஏற்படுத்த கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பவளவிழாவில் பங்கேற்றார் வைகோ. 13 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக மேடையில் வைகோ பங்கேற்றது மதிமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
கருணாநிதியுடன் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து கோபாலபுரத்தில் உடல்நலன் தேறியுள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தது, பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான திமுகவின் போராட்டத்தில் தோழமைக் கட்சி என்ற முறையில் பங்கேற்றது என்று திமுகவுடன் நட்பு பாராட்டி வருகிறார் வைகோ. இன்றும் திமு சார்பில் நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ பங்கேற்றார்.
அறிவாலயத்தில் வைகோ
ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்குப் பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்திருந்தார். அவரை முன்னாள் மத்திய அமைச்சர்டி.ஆர்.பாலு வந்து வரவேற்றுவிட்டு சென்றார். பின்னர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோவிற்கு ஸ்டாலினுக்கு மிக அருகில் முதல் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
அறிவாலய திறப்பு விழாவின் போது
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ தான் அறிவாலயம் வந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது : அண்ணா அறிவலாயம் திராவிட இயக்கத்தின் உயிரோவியம் அதை கட்டிஎழுப்பிய நாளில் கருணாநிதியுடன் இருந்த நாட்களும்,இதன் திறப்பு விழா நாளில் எனக்கு தங்க கணையாழியை கருணாநிதி எனக்கு அணிவித்த நிகழ்ச்சியும் என் மனதை விட்டு நீங்காதவை.
திராவிட வரலாற்று சான்று கலைஞர் கருவூலம்
திமுக செயல்தலைவர் ஸ்டாலினுடன் இணைந்து கலைஞர் கருவூலத்தை பார்வையிட்டேன். அதில் திராவிட இயக்கத்தின் வரலாற்று காவிய பொன்னேடுகள் உள்ளன, ஏறத்தாழ ஒரு மணி நேரம் பார்த்தேன். திராவிட இயக்கம் கருக்கொண்ட நாளில் இருந்து கலைஞர் பங்கேற்ற போராட்டங்கள், அவர்களின் சாதனைகள், எதிர்ப்புகள் என பல அங்கு இருந்தன.
சந்தோஷத்துடன் செல்கிறேன்
திராவிட இயக்கத்தின் சாதனை வரலாற்றை உணரும் வகையில் கருவூலம் அமைக்கப்பட்டிருக்கிறது. 2004ம் ஆண்டில் ஒரு முறை கருணாநிதியுடன் கலைஞர் கருவூலத்தை பார்த்திருக்கிறேன். இன்று பார்க்கும் போது வரலாற்றில் பங்கேற்ற அனைவரையும் திரும்பிப் பார்த்த சந்தோஷம் கிடைத்தது. அறிவாலயத்திற்கு வந்து செல்லும் போது மகிழ்ச்சியோடு செல்கிறேன் என்று வைகோ தெரிவித்தார்.