சிறைப்பறவை வைகோ...நாளை காலை புழலில் இருந்து விடுதலையாகிறார்!
தேச துரோக வழக்கில் ஜாமின் பெற்றுள்ள வைகோ நாளை காலையில் சிறையில் இருந்து வெளியாகிறார்.
சென்னை : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நாளை காலை புழல் சிறையில் இருந்து வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ள வைகோவை ஜாமினில் விடுவிக்க சென்னை முதன்மைநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதியே வைகோவை ஜாமினில் செல்ல அனுமதி அளித்தும் அதனை மறுத்து வைகோ சிறை சென்றார்.இந்நிலையில் நேற்று திடீரென வைகோ தரப்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்தமனுவை விசாரித்த நீதிமன்றம் வைகோவை விடுதலை செய்வதில் ஆட்சேபணை உள்ளதாக என்று கேள்வி
எழுப்பியது.
அரசுத் தரப்பு வைகோவை விடுவிப்பதற்கு மறுப்பு தெரிவிக்காததால் அவரை ஜாமினில் விடுதலை செய்ய சென்னை 4வது முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து வைகோ நாளை காலை 9 மணியளவில் புழல் சிறையில் இருந்து வெளிவருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.