மதிமுக கூட்டணி சேரும் கட்சி தோற்கிறதா?... வைகோ சொன்ன பதில் இது தான்!
மதிமுக கூட்டணி சேரும் கட்சி தோற்கிறதா என்பதற்கு இதன் பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : மதிமுக கூட்டணி சேரும் கட்சி தோல்வியை சந்திப்பது குறித்து அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைதளங்கள் எளியவனான தன்னை நிந்திப்பதாகவும் அதைப்பற்றி தான் கவலைப்படவில்லை என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவரிடம் சமூக வலைதளங்களில் அவர் பற்றி வலம் வரும் கேலிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த வைகோ, சமூக வலைதளங்களில் அதிகமாக நிந்திக்கப்படுகிறவனும், விமர்சிக்கப்படுகிறவனும் நான் தான்.
சிலர் திட்டமிட்டுக் கொண்டு என்னை கேலி செய்து சமூக வலைதளங்களில் கருத்துகளை பரப்பி வருகின்றனர். இந்த எளியவன் வந்து பிரச்சாரம் செய்தால் தான் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று கருணாநிதி நீதிமன்றத்தில் வந்து எனக்காக காத்திருந்தார்.
61 நாட்கள் சிறப்பான பிரச்சாரம் செய்திருக்கிறேன்
2 முறை என்னை சிறையில் வந்து அவர் இது தொடர்பாக சந்தித்து விட்டு சென்றிருக்கிறார். 61 நாட்கள் தமிழகம் முழுவதும் இந்த கறுப்பு துண்டுக்காரன் பிரச்சாரம் தான் 40 நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றியை தேடித் தந்தது என்று இந்து நாளேடு சிறப்பு செய்தியை பிரசூரித்திருந்தது. இந்த கறுப்புத் துண்டு தான் 40 தொகுதிகளிலும் வெற்றி தேடித் தந்தது. 1998ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்த போது அந்த கூட்டணி வெற்றி பெற்றது, 1999ல் திமுகவுடன் நாங்கள் தேர்தல் கூட்டணி வெற்றி பெற்ற போது அப்போதும் வெற்றி பெற்றது.
பிரச்சாரத்தால் திமுக ஜெயித்துள்ளது
திமுகவில் எளியவனான நான் தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்த போது தான் மயிலாடுதுறை தொகுதியில் வெற்றியை பெற்றத் தந்தேன் என்று கருணாநிதி என்னை தனியாக அழைத்து பாராட்டினார். நான் தேர்தல் பணிக்குழு செயலாளராக இருந்தத போது தான் முதன்முதலில் திமுக ஆட்சிக்கு வந்தது.
பொருட்படுத்தவில்லை
என்னை நிந்திக்க வேண்டும் என்பதற்காகவே சில பேர் சொல்வதை நான் பொருட்படுத்தவில்லை. நான் அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. கொள்கைகள், லட்சியங்களுக்காக நேர்மையான அரசியல்வாதியாக இருக்கிறேன்.
வன்மத்துடன் செயல்படுகின்றனர்
நான் கொள்ளைகளில் உறுதியாக இருப்பதால் தான் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன். என் மீது வன்மம் வைத்துக் கொண்டு சிலர் இது போன்று சமூக வலைதளங்களில் செயல்படுவதை நான் பொருட்படுத்தவில்லை என்று வைகோ தெரிவித்தார்.