அடுத்தடுத்து 6 முறை நகராட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்த கரூர் மதிமுக கவுன்சிலர்.. மக்களுக்காக!
கரூர்: அடிப்படை வசதிகள் செய்து தராத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நகராட்சி கூட்டத்தை தொடர்ந்து 6வது முறையாக புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் ம.தி.மு.க கவுன்சிலர் சத்தியமூர்த்தி.
கரூர் நகராட்சியின் 47 வது வார்டு உறுப்பினர் சத்தியமூர்த்தி. இவர் ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு கரூரிலேயே அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர் ஆவார்.
இந்த நிலையில், கரூர் நகராட்சியின் சாதாரண மற்றும் அவசர கூட்டம் இன்று நகர்மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் சத்தியமூர்த்தி கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து கூட்ட அரங்கின் வாயினில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது, அ.தி.மு.க நகர்மன்ற தலைவர், நான் ம.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர் என்பதனாலேயே எனது வார்டு பகுதிகளுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை.
இது குறித்து நகர்மன்ற கூட்டத்தில் பலமுறை தலைவரிடம் நேரிடையாக முறையிட்டும் இது வரை எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை. எனது வார்டில் சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இது வரை செய்து தரப்படாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கும், பல்வேறு நோய்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். எனவே இன்றைய கூட்டத்தை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.
இந்த கூட்டத்தோடு சேர்த்து மொத்தம் 6 வது முறையாக தொடர்ந்து நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்துள்ளார் சத்தியமூர்த்தி. இதே நிலை நீடித்தால், எனது வார்டு பகுதிகளை சார்ந்த பொதுமக்களை ஒன்று திரட்டி நகராட்சியை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.