ஆர்.கே.நகரில் திமுக வெற்றி பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது : வைகோ திட்டவட்டம்
ஆர்.நகர் தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், மதிமுக பொதுச்செயலர் வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Recommended Video
சென்னை : தி.மு.க சார்பில் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள மருதுகணேஷ், மதிமுக பொதுச்செயலர் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஆர்.கே நகர் தொகுதிக்கு வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தத் தேர்தலில் தி.மு.க சார்பாக மருது கணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்தத் தேர்தலில் ஏற்கனவே தி.மு.க.,விற்கு விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்து உள்ளன.
இந்நிலையில், நேற்று ம.தி.மு.க.,வும் தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார். தற்போது அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ், வைகோவை ம.தி.மு.க.,வின் தலைமையகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய வைகோ, மருதுகணேஷை வெற்றி பெறச்செய்யவே தி.மு.க கூட்டணியில் நாங்கள் இணைந்து உள்ளோம். ஜனநாயகத்திற்கு ஏற்பட்டு இருக்கக்கூடிய ஆபத்துகளை தடுத்து நிறுத்தி முறியடிக்கவும், தேர்தல் ஆணையத்தின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றாலும், தேர்தல் ஆணையம் சில நேரங்களில் நேர்மை தவறினாலும் வெற்றி தி.மு.க பக்கம் தான் என்பது உறுதியாகிவிட்டது என்றார்.
மேலும், ஆளும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மக்கள் மனதில் மூண்டு இருக்கும் தீயை அவ்வளவு எளிதாக யாராலும் அணைத்து விட முடியாது அது அண்ணாவின் சின்னத்திற்கு வெற்றியைத் தேடித்தரும். இதனை எந்த சக்தியாலும் இதைத் தடுக்க முடியாது என்று தெரிவித்தார். ஆதரவு வழங்கியதற்காக தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் எங்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.
தி.மு.க தொண்டர்களோடு இணைந்து ம.தி.மு.க தொண்டர்களும் இணைந்து களப்பணி ஆற்றுவார்கள். மேலும், வருகிற சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தி.மு.க வெற்றி பெற வேண்டும் அதற்கு ஆர்.கே நகர் வெற்றியே நுழைவுவாயில் என்கிற எண்ணத்தோடு அனைவரும் செயல்படவேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டார்.