வைகோவா அது? அர்ச்சகர் தந்த தீர்த்தம் குடித்து.. எவ்வளவு பக்தி! கோயிலில் கருப்பு துண்டை காணோமே
தென்காசி: கலிங்கப்பட்டி பகுதியில் உள்ள பெருமாள் கோவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாமி தரிசனம் செய்த வீடியோ இணையதளத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் அமைந்து இருக்கிறது ஸ்ரீ மேல மரத்தோணி ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோயில். 100 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் அப்பகுதியில் பிரசித்திபெற்ற ஒன்றாக உள்ளது.
மதிமுக நிறுவனரும் பொதுச்செயலாளருமான வைகோவின் தாத்தா கோபாலசாமி கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் இந்த கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது.
இந்தி திணிப்பு - தாழையூர் தங்கவேல் தீக்குளிப்பு மரணமே இறுதியாக இருக்கட்டும்: வைகோ வீரவணக்கம்
வைகோ தாத்தா கட்டிய கோயில்
திராவிட கொள்கைகளை பேசியும் கடைபிடித்தும் வந்தாலும், தனது தாத்தா கட்டிய கோயில் என்பதால் அதனை தனது சொந்த செலவிலேயே புனரைப்பு செய்து வருகிறார் வைகோ. இதற்காக அடிக்கடி கோயிலுக்கு சென்று புனரமைப்பு பணிகளை அவர் கவனித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் கோயிலுக்கு சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
கருப்பு துண்டு
கடந்த 20 ஆம் தேதி புனரமைப்பு பணிகளை பார்வையிடுவதற்காக வைகோ, ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு சென்று உள்ளார். அங்கு கருப்பு துண்டை கழற்றி அருகில் உள்ள நபரிடம் கொடுத்தார் வைகோ. பரவி வரும் வீடியோவில் ஒரு நபர் கருப்புத்துண்டுடன் ஓரமாக நிற்பது தெரிகிறது. அதன் பிறகு அருகே நின்றவரிடம் பணம் பெற்று அர்ச்சகர் தட்டில் அவர் காணிக்கை செலுத்தினார்.
தீர்த்தம், குங்குமம்
இதனை தொடர்ந்து அர்ச்சகர் வழங்கிய தீர்த்தத்தை குடித்த வைகோ, தட்டில் இருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் இதனை பகிர்ந்து வைகோவையும், அவரது பெரியாரிய கொள்கைகளையும் விமர்சித்து வருகின்றனர்.
பகுத்தறிவு கொள்கை
பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பகுத்தறிவு கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட வைகோ சிறுவயதிலேயே திராவிட, சமூக நீதி கொள்கைகளை மேடைகள் எங்கும் பேசி முழங்கி வந்தார். ஒரு காலத்தில் திமுகவின் வீரியமிக்க பேச்சாளராக திகழ்ந்த வைகோ, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதன் காரணமாக புகழ் பெற்றார்.
மதிமுக தொடக்கம்
கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திமுகவில் இருந்து விலகி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய வைகோவுக்கு பின்னால் திமுகவை சேர்ந்த பெருமளவிலான தொண்டர்கள் அணி திரண்டனர். தொடக்கத்தில் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக அது உருவெடுத்தது. ஆனால், காலப்போக்கில் மதிமுக கூட்டணி கட்சியாக சுருங்கிவிட்டது.
அரசியல் நிலைபாடு
மாறி மாறி கூட்டணி வைத்தது, பாஜகவுடன் கூட்டணி, மக்கள் நலக்கூட்டணி என வைகோவின் அரசியல் நிலைபாடுகள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகின. இருப்பினும் ஈழ விவகாரம், 7 தமிழர் விடுதலை, இந்தி திணிப்பு, காவேரி பிரச்சனை, விவசாயிகள், மீனவர்கள் பிரச்சனை என பல விவகாரங்களில் தொடர்ந்து குரல் கொடுத்தவர் வைகோ. தற்போது மதிமுக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. மாநிலங்களவை உறுப்பினராக வைகோ உள்ள நிலையில், அவரது மகன் துரை வைகோ தற்போது கட்சிப்பணிகளை கவனித்துக் கொள்கிறார்.