வைகோ நடத்தும் மதுவிலக்கு மராத்தான் போட்டி: அனுமதி இலவசம்... பரிசு ரூ.25,000!
சென்னை: மதுப்பழக்கத்திற்கு எதிராக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மதுவிலக்கு மராத்தான் போட்டியை அறிவித்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மதுப்பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்ற மன நிலையை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக மதுவிலக்கு மராத்தான் போட்டியை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக நடத்துகின்றோம்.
இந்தப் போட்டி வருகின்ற 2015 ஜனவரி மாதம் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு சென்னைத் தீவுத்திடல், பல்லவன் இல்லம் அருகே உள்ள மன்றோ சிலை அருகிலிருந்து தொடங்கி மெரினா கடற்கரை வழியாக கலங்கரை விளக்கம் அருகே நிறைவு பெறுகிறது. போட்டியின் மொத்த தூரம் 5 கி.மீட்டர் ஆகும். இந்தப் போட்டி 6 பிரிவுகளாக - குறுகிய கால இடைவெளியில் தனித்தனியாக தொடங்கப்படும்.
பிரிவு 1 கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆண்கள் (25 வயதுக்குள்), பிரிவு 2 கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் (25 வயதுக்குள்), பிரிவு 3 பள்ளி மாணவர்கள் 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை, பிரிவு 4 பள்ளி மாணவிகள் 10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை, பிரிவு 5 பள்ளி மாணவர்கள் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை, பிரிவு 6 பள்ளி மாணவிகள் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை.
போட்டி நடைபெறும் சாலையில் போதுமான இடங்களில் குடிதண்ணீர், குளுகோஸ் ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி நிறைவு பெறும் இடத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலைச் சிற்றுண்டி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 கி.மீட்டர் தொலைவுக்குள் பல இடங்களில் தேவைப்படும் முதலுதவி வழங்க மருத்துவர்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் சேவை புரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்துப் போட்டிகளும் நிறைவு பெற்றதும் 6 பிரிவுகளில் வெற்றி பெற்ற 30 நபர்களுக்கும் பரிசுத் தொகை வழங்கப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவருக்கான முதல் பரிசு ரூ. 25,000, இரண்டாம் பரிசு ரூ. 15,000, மூன்றாம் பரிசு ரூ. 10,000, நான்காம் பரிசு ரூ.7,000, ஐந்தாம் பரிசு ரூ. 5,000 வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும். மேலும் போட்டியில் பங்கேற்று நிறைவு செய்யும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களை தேர்வு செய்ய 200 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் 30 இருசக்கர வாகனங்களுடன் 60 நபர்களைக் கொண்ட கண்காணிப்பாளரும் இடம்பெறுவார்கள்.
மராத்தான் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்- மாணவியர்கள் மற்றும் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
மதுவின் கோரப்பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க, மாணவ சமுதாயம் இந்த நச்சு பொய்கையில் சிக்கிவிடாமல் தடுக்க மதுவிலக்கு மராத்தான் போட்டிகளில் மாணவர்களையும் பங்கேற்க அழைக்கின்றேன். அம்மாணவர்களை அனுப்பி வைக்குமாறு பெற்றோரை வேண்டுகிறேன்" என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.