ஒரு சில நிர்வாகிகள் விலகுவதால் மதிமுகவுக்கு பாதிப்பு இல்லை..கட்சி கட்டுக்கோப்புடன் உள்ளது - வைகோ
சென்னை: தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஒரு சில நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்குச் செல்வதால் மதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. கட்சி கட்டுக்கோப்புடன் வலுவாக உள்ளது என அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சட்டசபைத் தேர்தலில் மதிமுக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது மற்றும் கட்சியின் நிலைப்பாடு குறித்து வைகோ ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மதிமுக உயர்நிலை குழுக் கூட்டம், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறுகையில், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட, கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து, இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இன்னும் 10 மாவட்டங்களில் வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் சுற்றுப்பயணத்தை நடத்தி முடிப்பதற்கான திட்டமும் இந்தக் கூட்டத்தில் வகுக்கப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப்பது தொடர்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் நலக் கூட்டு இயக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அந்தந்த மாவட்டங்களில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளோடு இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு ஒரிரு நிர்வாகிகள் வேறு கட்சிகளுக்குச் செல்வதால் மதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அவர்களைத் தவிர, கட்சிக்கு வேறு எங்கும், எந்தவிதமான சேதாரத்தையும் யாராலும் ஏற்படுத்த முடியவில்லை. மதிமுக கட்டுக்கோப்பாகவும், வலுவாகவும் இருக்கின்றது. தொண்டர்களின் உறுதியினால் இயங்கிக் கொண்டிருக்கும் கட்சி இது.
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்தும், அதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசை வலியுறுத்தியும் சட்டப் பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு வைகோ கூறினார்.