கருணாநிதியை சந்திக்க சென்ற வைகோவிற்கு எதிர்ப்பு.. திமுகவினரின் செயல் நாகரீகமற்றது - மல்லை சத்யா
திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கச் சென்ற வைகோவிற்கு திமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு செருப்பை காட்டி அநாகரீகமாக நடந்து கொண்டனர்.
சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை தடுத்து நிறுத்தியது நாகரீகமற்ற செயல் என மல்லை சத்யா கூறியுள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். வயது முதுமை காரணமாக இயல்பாக சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டதால் அவருக்கு ட்ரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று மாலை காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவரை மருத்துவமனைக்கு உள்ளே விடாமல், திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வைகோவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால், மருத்துவமனைக்கு உள்ளே போகாமல் திரும்பிச் சென்றார் வைகோ.
இதற்கு மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வைகோ வருவதை அறிந்த திமுகவினர் முன்னதாகவே கல்வீசி தாக்குதல் நடத்தினர். வைகோ கார் மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர். திமுக தொண்டர்களை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. உண்மையான் அக்கறையுடன் கருணாநிதியை நலம்விசாரிக்க வந்த வைகோ மீது திமுகவினர் நடந்துகொண்ட செயல் நாகரீகமற்றது. இது தவிர்க்கப்பட்டிருந்க வேண்டும் என்றார்.