மதிமுகவின் 21ம் ஆண்டு துவக்க விழா: உடல் உறுப்பு தானம் செய்யும் கட்சியினர்
சென்னை: மதிமுகவின் 21ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் செய்ய மதிமுகவினர் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து மதிமுக இணையதள நண்பர்கள் சார்பில் வெளியிடப்படுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னையில் நடைபெற்ற "இணையதள நண்பர்களின் ஆலோசனை கூட்டத்தில்" நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்படி, மதிமுகவின் 21ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மதிமுக பொது செயலாளரின் "பொன்விழா ஆண்டு" நிகழ்வுகளை முன்னிட்டு, இணையதள நண்பர்கள் சார்பாக பல்வேறு பொது நல நிகழ்வுகளை நடத்த முடிவு செய்துள்ளோம்.
இந்த நிலையில் நாம் இந்த உலகை விட்டுச் செல்லும் போது எடுத்துச் செல்ல ஒன்றுமில்லை. ஆனால் விட்டுச் செல்ல பல உண்டு. அதை மெய்ப்பிக்கும் விதமாக மதிமுக இணையதள நண்பர்கள் பலர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்துள்ளனர்.
நாம் இறந்த பின்பும் நம்மால் பலரை வாழ வைக்க முடியும் என்றால் அதற்கு உடல் உறுப்பு தானம் செய்வது ஒன்றே சிறந்த வழி. நெருப்பிலிருந்து உயிர்த்து வரும் பீனிக்ஸ் பறவை போல் நம் உயிர் மரித்தபின்பும் நம் உடல் உறுப்புகள் பலரை வாழவைக்கும். வாழ்ந்திருக்கும்.
எனவே, விருப்பமுள்ள நபர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை உடனே மதிமுக இணையதள நண்பர்கள் பதிவில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படும் முகவரிக்கு உரிய படிவம் அனுப்பி வைக்கப்படும்.
நிரப்பப்பட்ட படிவங்களை மே 5 இரவு 9 மணிக்குள் அனுப்பினால் உங்களுக்கு உரிய கொடையாளர் அட்டை, மற்றும் விளக்கக் கையேடு மோகன் பவுண்டேசன் மூலமாக வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.