உட்கட்சிப் பூசல்... தேமுதிக கொடிக்கம்பங்களை கட்சியினரே அகற்றியதால் பெரியகுளத்தில் பரபரப்பு
பெரியகுளம் தேமுதிக மாவட்ட செயலாளருக்கு எதிராக கட்சிக்குள் மோதல் வெடித்துள்ளது.
Recommended Video
பெரியகுளம்: நாளுக்கு நாள் தேமுதிமுகவுக்கு பின்னடைவுதான் ஏற்பட்டு வருகிறது. சட்டசபை தேர்தலின்போது கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியை அடுத்து முன்னாள் எம்.எல்.ஏக்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் என ஒவ்வொருவராக வெளிவரத் தொடங்கினர். இது கட்சித்தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனுடன் கட்சி நிறுவனரும் தலைவருமான விஜயகாந்த்தின் உடல்நிலை சேர்ந்து கொள்ளவும் நிலைமை கட்சி நிலைமை இன்னும் படுமோசமானது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேமுதிக பொறுப்பாளர்கள், செயலாளர்களிடையே பிளவு ஏற்பட்டு வருகிறது. தற்போது விஜயகாந்த் சிகிச்சையின்கீழ் உள்ளதால் நிர்வாக குறைகளை சரிகட்ட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இன்றுகூட பெரியகுளத்தில் தேமுதிகவில் ஏற்பட்ட எதிர்ப்பு தற்போது முற்றி வெடித்துள்ளது. பெரியகுளம் கட்சியின் மாவட்ட செயலாளராக இருப்பவர் கிருஷ்ணமூர்த்தி. இவர், தேமுதிக நகர செயலாளர் பதவிக்கு 30 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு உறுப்பினர்கள் தர மறுத்தனர். அதனால், அந்த ஊருக்கு சம்பந்தமே இல்லாத வெளி ஊரை சேர்ந்த ஒருவருக்கு நகர செயலாளர் பதவியை கொடுத்து விட்டதாக உள்ளூர் தேமுதிகவினர் பலமாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதற்காக தங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கும்பொருட்டு, பெரியகுளத்திலுள்ள அனைத்து கொடிக்கம்பங்களையும் தேமுதிகவினரே அகற்றி தள்ளினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கட்சியின் தலைமை தன்னுடைய போக்கை மாற்றிக் கொண்டு, நாளுக்கு நாள் தேய்ந்துவரும் கட்சியை உடனடியாக வலுப்படுத்தாவிட்டால், தேமுதிக சுவடு தெரியாமல் எதிர்காலத்தில் போய்விடக்கூடும் என கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.