பிரபாகரன் சிலை அகற்றம்: மதிமுகவினர் கறுப்புக்கொடி ஆர்பாட்டம்
நாகை: பிரபாகரன் சிலையை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகப்பட்டிணம் தாசில்தார் அலுவலகம் முன் கறுப்புக்கொடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை தமிழர்களின் காவல் தெய்வமாகக் கருதி தெற்கு பொய்கை நல்லூரில் சிலை எடுத்தனர். கோவிலுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இது குறித்து ஊடகங்களில் பரபரப்பாக செய்தி வெளியானது. இந்த நிலையில் இரவோடு இரவாக சிலையை அகற்றுமாறு போலீசார் வற்புறுத்தவே, கோவிலில் இருந்து பிரபாகரன் சிலை அகற்றப்பட்டது.
இதற்கு தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரபாகரன் சிலையை இடித்துத் தகர்த்ததைக் கண்டித்து மதிமுக துணைப் பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் தலைமையில், நாகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.
அதன்படி பிரபாகரன் சிலையை அகற்றிய அ.தி.மு.க. அரசைக் கண்டித்து, காலை பத்து மணி அளவில், நாகப்பட்டினம் தாசில்தார் அலுவலகம் எதிரே, மதிமுகவினர் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரபாகரன் சிலை அகற்றத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதனையடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.