ம தி.மு.க. மாணவர் அணி பேச்சுப் போட்டி: திருச்சி மாணவிக்கு ரூ.100000 பரிசு
சென்னை: மதிமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் திருச்சி மாணவி முதல்பரிசு ரூ.1 லட்சத்தை தட்டிச்சென்றார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணி கல்லூரி மாணவர்களின் சொல்லாற்றலை வளர்த்திடும் வகையில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டியை நடத்தியது.
இந்த ஆண்டு ‘வைகோவின் வெல்லும் சொல்' எனும் தலைப்பில் மாவட்ட, மண்டல, மாநில அளவில்போட்டியினை நடத்தியது.
மாநில அளவிலான நிறைவுப் போட்டி சென்னை, புரசைவாக்கம், கங்காதீஸ்வரர் கோவில் தெரு, கம்மவார் திருமண மகாலில் 21.09.2014 ஞாயிறு காலை 9.30 மணிக்குத் தொடங்கி மாலை 4.00 மணி வரை நடைபெற்றது.
இப்போட்டியில், தாம்பரம் கிறித்துவக் கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கு. அரசேந்திரன், மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் முகிலை இராஜபாண்டியன், தியாகராய நகர் ஷாசுன் ஜெயின் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் நா.உமாகேஸ்வரி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.
இதில், ரூபாய் ஒரு இலட்சத்திற்கான முதல் பரிசை திருச்சி காவேரி கலைக் கல்லூரியைச் சேர்ந்த நா.சாத்தம்மை பிரியா என்ற மாணவியும், ரூபாய் 50 ஆயிரத்திற்கான இரண்டாம் பரிசினை, ஈரோடு கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ப.சத்தியவதியும், ரூபாய் 25 ஆயிரத்திற்கான மூன்றாம் பரிசை நாகர்கோவில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி டி.பிர்ஜ்யாவும்
ரூபாய் 10 ஆயிரத்திற்கான ஆறுதல் பரிசினை எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக மாணவர் ம.குறிஞ்சிக் கொற்றவனும் வெற்றனர்.
இதில், சிறப்புப் பார்வையாளராக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு அளித்து வாழ்த்தினார்.
வழக்கறிஞர் ஜி. தேவதாஸ், இமயம் ஜெபராஜ், ஆட்சிமன்றக் குழுச் செயலாளரும், ஈரோடு மாவட்டச் செயலாளருமான அ.கணேசமூர்த்தி, மாநில மகளிர் அணிச் செயலாளர் திருமதி குமரி விஜயகுமார், மாவட்டச் செயலாளர்கள் வடசென்னை -ஜீவன், தென்சென்னை -வேளச்சேரி மணிமாறன், திருவள்ளூர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், காஞ்சிபுரம் -பாலவாக்கம் சோமு, தருமபுரி -வி.எஸ்.சம்பத், இலக்கிய அணி மாநிலச் செயலாளர் கோமன் கோட்டைசாமி, மற்றும் மாநில, மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இப்பரிசுத் தொகையினையும், மாநில, மண்டல, மாவட்ட அளவில் வென்றோருக்கான ‘நற்றமிழ் நாவரசு', ‘இளம் சொல்லரசு', ‘இளம் நாவலர்' விருதுகள் மற்றும் பாராட்டுப் பட்டயங்களை மதுரை மாநகர், தொழில் வர்த்தக சங்க அரங்கில் 12.10.2014 அன்று நடைபெறும் விழாவில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பங்கேற்று வழங்குகிறார்.
மாநிலப் பேச்சுப் போட்டிக்கான ஏற்பாடுகளை மாநில மாணவர் அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன் மற்றும் மாணவர் அணியினர் செய்திருந்தனர்.