ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு மதிமுக முழு ஆதரவு: வைகோ
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு மதிமுக முழு ஆதரவு உண்டு என்று வைகோ தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியது மோசமானது. இந்தப் போராட்டத்திற்கு மதிமுகவின் முழுமையான ஆதரவு உண்டு என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்று வரும் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது. இதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி செல்ல அனுமதி கேட்டு, போலீஸார் மறுத்த நிலையில், பொதுமக்கள் தடையையும் மீறி பேரணி சென்றனர்.
பேரணி சென்ற பொதுமக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால், பொதுமக்கள் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர். 10000க்கும் அதிகமானோர் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்களைத் தடுக்க முடியாமல் போலீஸார் திணறினர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற பொதுமக்கள், அங்கு வாகனங்களைச் சூறையாடி தீவைத்தனர். இதனால் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால், 10 பேர் பலியாகினர்.
இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தி இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலியாகி இருப்பது கொடூரமான சம்பவம்.
ஒவ்வொரு முறையும் தான் ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலி என்பதை எடப்பாடியின் அரசு காட்டுகிறது. மத்திய பாஜக அரசும், ஆளும் அதிமுக அரசும் மக்கள் விரோதப் போக்கைக் கடைபிடித்து வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு மதிமுகவின் முழுமையான ஆதரவு உண்டு என்று தெரிவித்துள்ளார்.