நடிகர் சங்கத்தில் பிறந்த மதிமுகவுக்கு இன்று 24வது பிறந்த நாள்..! #vaiko
சென்னை: அரசியல் அரங்கில் கிட்டத்தட்ட தனித்து விடப்பட்டு விட்ட நிலையில் மதிமுக தனது 24வது பிறந்த நாளை, வைகோ சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அமைதியாக கொண்டாடுகிறது.
1994ம் ஆண்டு பிறந்த கட்சி மதிமுக. திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட வைகோ தனது ஆதரவாளர்களுடன் மதிமுகவை 1994ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி தொடங்கினார். நடிகர் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் புதிய கட்சியை அறிமுகப்படுத்தினார் வைகோ.
கட்சி தொடங்கியதிலிருந்து எத்தனையோ போர்க்களத்தை சந்தித்துள்ள வைகோ, இதுவரை சட்டசபைக்கு ஒருமுறை கூட தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. 3 முறை ராஜ்யசபா எம்.பியாக இருந்துள்ள வைகோ, 2 முறை லோக்சபா எம்.பியாகவும் இருந்தவர்.
19 மாத சிறைவாசம்
கடந்த 2001ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதம் சிறைவாசம் அனுபவித்தவர். அந்த சிறைவாசம் தந்த பாடத்தால் மீண்டும் திமுக பக்கம் திரும்பினார். ஆனால் திமுக கூட்டணியிலும் அவர் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. வேகமாக விலகி வந்தார்.
ஏமாற்றிய அமைச்சர் பதவி
சாதாரண பஞ்சாயத்துத் தலைவர் பதவி முதல் எம்.பி பதவி வரை பல நிலைகளைப் பார்த்தவர் வைகோ. இவருக்குக் கிடைக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்த மத்திய அமைச்சர் பதவியை மட்டும் இவர் வகிக்கவே முடியவில்லை. பலருக்கும் இது இன்னும் கூட ஒரு ஏமாற்றமாகவே உள்ளது.
நிறைவேறாத கனவு
முதல்வர் பதவிக்குத் தகுதியான ஒரு தலைவர் என்ற பெருமையும் நீண்ட காலமாகவே "பென்டிங்கில்" இருந்தது. ஆனால் தற்போது அது நிறைவேற முடியாத கனவாக மாறிப் போய் விட்டது. 1964ல் அரசியலில் நுழைந்த வைகோ அரசியலில் பொன் விழா கண்டவர்.
போராட்டமே வாழ்க்கை
தமிழகத்தின் பல உயிர் நாடிப் பிரச்சினைகளில் எல்லோருக்கும் முன்பு உரக்கக் குரல் கொடுத்தவர், முதலில் போராட்டக் களம் புகுந்தவர். ஈழத் தமிழர் பிரச்சினையாகட்டும், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையாகட்டும், மீனவர்கள் பிரச்சினையாகட்டும்.. மது விலக்குப் போராட்டமாகட்டும். வீறு கொண்டெழுந்து போராட்டக் களம் கண்டவர் வைகோ. இப்படி பல்வேறு சவால்களையும், சண்டைகளையும் சந்தித்து 24 வருடம் வரை கட்சியைக் கொண்டு வந்து விட்டார் வைகோ.
புயல்கள் அடித்தாலும்
எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், நாஞ்சில் சம்பத் என பிரபலமானவர்கள் பலர் கட்சியை விட்டு வெளியேறிச் சென்று விட்ட நிலையிலும் கூட கட்சியை இன்னும் உயிர்ப்புடன் வைத்துள்ளார் வைகோ என்பதே ஆச்சரியம்தான். பல புயல்களைச் சந்தித்தபோதிலும் கூட மதிமுக என்ற கட்சி அசையாம் இருப்பதே பாராட்டுக்குரியதுதான்.
விஜயகாந்த்தை வீழ்த்திய புண்ணியம்
கடந்த தேர்தலுக்கு முன்பு வரை வைகோ ஒரு மாபெரும் சக்தியாக பார்க்கப்பட்டார். ஆனால் கடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் இவர் செயல்பட்ட விதம், வைகோவுக்கு பெரும் கெட்ட பெயரையே தேடிக் கொடுத்தது. திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க எந்த அளவுக்கும் இறங்கக் கூடியவர் என்ற விமர்சனத்தை சந்தித்தார். விஜயகாந்த்தின் அஸ்தமனத்திற்கும் வித்திட்டார்.
எப்படி இருப்பினும் தமிழக மக்களுக்காக உரத்துக் குரல் கொடுத்தவர்களில் வைகோ முக்கியமானவர். அந்த அடிப்படையில் இவருக்கும், இவரது கட்சிக்கும் வாழ்த்து சொல்லலாம்.