தூத்துக்குடியில் தலைவிரித்தாடும் குடிநீர்ப் பஞ்சம்.. போர்க்கால நடவடிக்கை கோரும் மதிமுக
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியில் நிலவிவரும் குடிதண்ணீர் தட்டுப்பாட்டை போக்கிட மாவட்ட - மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க செயலாளர் எஸ்.ஜோயல் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க செயலாளர் எஸ்.ஜோயல் வெளியிட்டுள்ள அறிக்கை:
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பொதுமக்களுக்கு தேவையான குடி தண்ணீர் பெரும்பாலும் தாமிரபரணி ஆற்றுப் படுகைகளில் இருந்து உறைகிணறுகள் மூலமாக எடுக்கப்பட்டு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் அடிப்படையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது கோடைகாலம் முடிந்துள்ள சூழலிலும் மாவட்டத்திலுள்ள பல்வேறு கிராமப்பகுதிகளிலும் குடிதண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தின் தலைநகரமான தூத்துக்குடி மாநகர் பகுதி மக்களுக்கு தாமிரபரணி ஆற்றின் மருதூர் அணைப்பகுதியில் இருந்து மூன்று பைப்லைன்கள் மூலமாக குடிநீர் எடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக தூத்துக்குடி மாநகரில் ஏப்ரல், மே மாதமான கோடை காலங்களில் குடிதண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கையாகும். ஆனால் இந்த ஆண்டு கோடைகாலம் முடிந்துள்ளபோதும் மாநகரில் கடந்த சில மாதங்களாக குடிதண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக இருக்கிறது.
வாரத்தில் இருமுறை என்பது வாரத்தில் ஒருமுறையாக மாறி தற்போது 10நாட்களுக்கு ஒருமுறை என்ற ரீதியிலேயே மாநகர மக்களுக்கு குடிதண்ணீர் கிடைப்பது கூட அரிதாகி விட்டது. நாங்கள் பதவிக்கு வந்தால் ''தட்டுப்பாடு இல்லாமல் நாள்தோறும் குடிதண்ணீர் தருவோம்'' என்று சொன்னவர்கள் இன்று தாமிரபரணி ஆற்றில் தண்ணீர்வரத்து அதிகமாக இருந்தபோதும் மாநகர மக்களை குடிதண்ணீர் தட்டுப்பாட்டில் பரிதவிக்கவிட்டு வருவதற்கான காரணம் புரியவில்லை.
தாமிரபரணிக்கு தண்ணீர் தரும் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து குடிதண்ணீர் மற்றும் விவசாய தேவைகளுக்காக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள சூழலில் இந்த தண்ணீரை தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் உள்ளிட்ட நஞ்சுஆலைகள் நாள்தோறும் கோடிக்கணக்கான லிட்டர் அளவில் முறைகேடாக உறிஞ்சி எடுத்து வருகின்றன. இதனால் மாவட்டத்தில் விவசாய நெற்பயிர் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களுக்கான குடிதண்ணீருக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
தொழிற்சாலைகளுக்கு முறைகேடாக தண்ணீர் எடுப்பதை தடுத்து மாவட்டத்திலுள்ள விவசாயிகள், பொதுமக்களை பாதுகாக்கவேண்டிய மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் ஸ்டெர்லைட் போன்ற நஞ்சுத்தொழிற்சாலைகளுக்கு தொடர்ந்து சாதகமாக செயல்பட்டு வருவது முறையற்ற செயலாகும்.
மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் தான் குடிநீர் ஆதாரமாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் தாமிரபரணியில் மழைக்காலங்களில் 20டி.எம்.சி தண்ணீர் வீணாகுவதை தடுத்து தேக்கிவைத்து பயன்படுத்திட ஏதுவாக ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவதற்கான உத்தரவை தேசிய பசுமை தீர்ப்பாயம் மூலமாக நாங்கள் பெற்று தந்துள்ளபோதும் தூர்வாரும் பணியில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் அலட்சியபோக்குடன் நடந்துவருவது கண்டனத்திற்குரியதாகும்.
தற்போதுள்ள சூழலில் தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகளுக்கு முறைகேடாக தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் வழங்கிட உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும். இல்லாதபட்சத்தில் எங்கள் தலைவர்(மதிமுக பொதுச்செயலாளர்) வைகோ அவர்களின் ஆலோசனையின் பேரில் எனது(எஸ்.ஜோயல்) தலைமையில் விவசாயத்திற்கும், குடிப்பதற்கும் தண்ணீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.