ஸ்ரீவைகுண்டம் அணையில் அகலவாக்கில் தூர் வார வேண்டும்.. மதிமுக கோரிக்கை
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அணையின் தூர் வாரும் பணிகளை நீளவாக்கில் மேற்கொள்வதை உடனடியாக நிறுத்திவிட்டு பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி அகலவாக்கில் மேற்கொள்ள வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் எஸ். ஜோயல் கூறியுள்ளார்
தீர்ப்பாயத்தின் விதிமுறைகளை மீறி முறைகேடாக நடைபெறும் தூர் வாரும் பணிகள் குறித்து முறையிடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எஸ்.ஜோயல் வெளியிட்டுள்ள அறிக்கை:
பசுமைத் தீர்ப்பாய உத்தரவு
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மதிமுக தொடர்ந்த பொதுநல வழக்கில் அளிக்கப்பட்டுள்ள உத்தரவின்பேரில் சுமார் 100ஆண்டுகளுக்கும் மேலாக மழைக்காலங்களில் 20டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்திட வழியில்லாமல் தூர்ந்து போய் மண்மேடாகி கிடந்த ஸ்ரீவைகுண்டம் அணையில் தூர் வாரும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
மழைக் காலத்திற்கு முன்பாக
அணைக்கட்டில் இருந்து தூர் வாரவேண்டும், அணையிலுள்ள 18 மணல்வாரி ஷட்டர்களையும் சீரமைக்கவேண்டும். தூர் வாரும் பணிகளை குறிப்பிட்டபடி 5.01கிலோமீட்டர் தூரத்திற்கு, 8அடி ஆழத்திற்கு அகலவாக்கில் மேற்கொள்ளவேண்டும். மழைக்காலத்திற்கு முன்பாக பணிகளை துரிதமாக முடித்திடவேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இது அரசு உத்தரவாக கடந்த 23.07.2015 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
நீளவாக்கில் தூர் வாருவதா?
இந்நிலையில் அணையின் தூர் வாரும் பணிகளை மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் தீர்ப்பாயத்தின் உத்தரவினை பின்பற்றாமலும், தீர்ப்பாயத்தினை அவமதிக்கும் வகையிலும் நீளவாக்கில் தொடர்ந்து மேற்கொண்டு வருவது கண்டிக்கதக்கதாகும்.
தீர்பபாய உத்தரவுப்படி நடக்க வேண்டும்?
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் மதித்து செயல்படுத்தாமல் தூர் வாரும் பணிகளை வரைமுறையின்றி நீளவாக்கில் மேற்கொண்டு வருவதே ஸ்ரீவைகுண்டத்தில் அணை தொடர்பாக எழுந்து வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் முழுக்க முழுக்க காரணமாகும். எனவே மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் அணையின் தூர்வாரும் பணிகளை தீர்ப்பாய உத்தரவுப்படி தெளிவுபடுத்திடவேண்டும்.
அமலச் செடிகளை மட்டுமே அப்புறப்படுத்தியுள்ளனர்
அணைக்கட்டில் இருந்து தூர் வாரவேண்டுமென அரசின் முறையான உத்தரவு வெளியாகி பலநாட்களாகியும் அணைக்கட்டு பகுதியில் வெறும் அமலைச்செடிகள் மட்டுமே பெயரளவிற்கு அகற்றப்பட்டு வருகிறது. இவ்விடத்திலுள்ள மண்மேடுகள் இதுவரை அகற்றப்படவே இல்லை. அணையில் பழுதான நிலையிலுள்ள 18மணல்வாரி ஷட்டர்களையும் சீரமைப்பதற்கான ஆயத்தப்பணிகளை இதுநாள்வரை மேற்கொள்ளாதது பொதுப்பணித்துறையின் அலட்சியப் போக்கை வெளிக்காட்டுகிறது.
விவசாயிகளை ஏமாற்றுவது?
''தூர் வாரும் பணிகளை மூன்று மாதத்திற்குள் முடித்துவிடுவோம்'' என்று தீர்ப்பாயத்தில் பிரமாண வாக்குமூலம் அளித்துள்ள பொதுப்பணித்துறையும், மாவட்ட நிர்வாகமும் அணையின் தூர் வாரும் பணிகளை அகலவாக்கில் இதுவரை ஒருசதவீதம் கூட செய்து முடிக்காமல் இருப்பது விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும்.
துரிதமாக செய்க
மதிமுகவை பொறுத்தவரை பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி அணையின் தூர் வாரும் பணிகளை எதிர்வரும் பருவமழைக்காலத்திற்கு முன்பாக விரைந்து முடித்திடவேண்டும், மணல்வாரி ஷட்டர்களின் பழுதுகளை துரிதமாக சரி செய்திடவேண்டும், அணைக்கட்டில் இருந்து நிர்ணயிக்கப்பட்டுள்ள 5.01கிலோமீட்டர் தூரத்திற்கு, 8அடி ஆழத்திற்கு அகலவாக்கில் தூர் வாரும் பணிகளை தீர்ப்பாயத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு முழுமையாக செய்துமுடித்திடவேண்டும் என்பதேயாகும்.
தடுத்து நிறுத்துவோம்
அணையின் தூர் வாரும் பணிகளில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை மீறி முறைகேடுகள் நடந்தாலும், விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட 8 அடிக்கு மேல் கூடுதலாக ஒரு இன்ஞ் அளவிற்கு ஆற்றுமணலை அள்ளினாலும் அதனை நாங்கள் விவசாயிகள், பொதுமக்கள் துணையுடன் தட்டிக்கேட்டு, முறைகேடான பணிகளை தடுத்து நிறுத்திடுவோம்.
முற்றுப் புள்ளி வைப்போம்
தேசிய தீர்ப்பாயத்தின் உத்தரவினை அவமதிக்கும் வகையில் விதிமுறைகளை மீறி முறைகேடாக நீளவாக்கில் நடைபெறும் தூர் வாரும் பணிகள் குறித்து பசுமை தீர்ப்பாயத்திலும் முறையிட்டு முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்வோம் என்று அவர் கூறியுள்ளார்.