வாக்களித்தபடி மாணவர்களின் கடன்களை தமிழக அரசே செலுத்த வேண்டும்: மதிமுக தீர்மானம்
சென்னை: தேர்தலின்போது முதல்வர் அளித்த வாக்குறுதியின்படி கல்விக் கடன் பெற்ற அனைத்து மாணவர்களின் கடன்களையும் தமிழக அரசே செலுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று 27.07.2016 வியாழக்கிழமை, தலைமைக் கழகம் தாயகத்தில் கழக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த 25 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளமய - தனியார் மய - உலக மயமாக்கல் கொள்கை அனைத்துத் துறைகளிலும் சீரழிவை ஏற்படுத்தி இருக்கின்றது. சமச்சீரற்ற வளர்ச்சியால் ஏற்றத் தாழ்வுகள் பெருகிவிட்டன. பா.ஜ.க. அரசு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறி விட்டது.
முன்பேர வணிகம், இணையதள வணிகம் (Online Trade) ஆகியவை பொருள்களின் விலையேற்றத்திற்குக் காரணமாக உள்ளன. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தபோதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளைக் குறைக்கவில்லை. அதனால் விலைவாசி உயர்வு என்ற பெரும் சுமை மக்கள் மீது ஏற்றப்படுகிறது.
பொது வேலை நிறுத்தம்
புதிய தாராளமயக் கொள்கைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தவும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனையை இரத்து செய்யக் கோரியும், 2016 செப்டம்பர் 2 ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன. இந்தப் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.கழகம் ஆதரவு தெரிவிக்கிறது.
மேயர் தேர்வு
மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்ந்தெடுக்கும் பழைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிப்பது வரவேற்கத்தக்கது. எனினும் சுழற்சி முறையில் பெண்கள் மற்றும் பட்டியல் இனத்தவர் உள்ளாட்சிப் பதவிக்கு வருவதை உறுதி செய்யும் வகையில் நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
பாலாறில் அணை
காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகளில் தமிழகம் அண்டை மாநிலங்களால் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகின்றது.
தற்போது வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லையில் புல்லூரில் கட்டப்பட்டுள்ள தடுப்பு அணையின் உயரத்தை 5 அடியில் இருந்து 15 அடியாக உயர்த்தி உள்ளது. ஆந்திர மாநில அரசின் சட்டவிரோத நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த மத்திய -மாநில அரசுகள் முனைப்புடன் செயலாற்ற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகின்றது.
மீத்தேன் திட்டம்
காவிரி பாசனப் பகுதிகளில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம், விவசாயிகளைப் பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து இருக்கின்றார். தமிழக அரசு மீத்தேன் எரிவாயு மற்றும் ஷேல் எரிவாயு திட்டங்களுக்கு அனுமதி வழங்காமல், காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்
கல்விக்கடன்கள்
தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கல்விக் கடன் பெற்றுள்ள மாணவர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர். தேர்தலின்போது முதல்வர் அளித்த வாக்குறுதியின்படி கல்விக் கடன் பெற்ற அனைத்து மாணவர்களின் கடன்களையும் தமிழக அரசே செலுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கூட்டுறவு கடன்கள்
விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி குறித்த தமிழக அரசு அறிவிப்பு வரவேற்கத்தக்கது. எனினும் சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் கடன் தள்ளுபடி என்பதை பாரபட்சம் இல்லாமல் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
சட்டம் ஒழுங்கு சீரழிவு
தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருகின்றது. படுகொலைகள் அன்றாட நிகழ்வுகள் ஆகி விட்டன. இத்தகைய சட்டம் ஒழுங்கு சீரழிவுகளைக் கண்டு பொதுமக்கள் அஞ்சி நடுங்குகின்ற நிலைமை ஏற்பட்டு உள்ளது. லிப்படைகளை இரும்புக் கரம்கொண்டு ஒடுக்கவும், கொலை, கொள்ளைகள், பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
புதிய கல்விக்கொள்கை
நாட்டின் விடுதலைக்குப் பின்னர் கடந்த 69 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்விக் கொள்கையை முற்றிலும் மாற்றி அமைத்து, இந்துத்துவா செயல்திட்டத்தைப் புகுத்த முயற்சிக்கும் வகையில், புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு இருக்கின்றது. தமிழக அரசு இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதுடன், புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சிப்பதை உறுதியாக தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகின்றது.
ஆசிரியர் பணியிடங்கள்
தமிழ்நாட்டில் ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் பெரும்பாலும் அரசு கலைக் கல்லூரிகளில்தான் பயின்று வருகின்றனர். ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள மொத்தம் 87 அரசு கலைக் கல்லூரிகளில் 46 கல்லூரிகளில் முதல்வர் பணி இடங்கள் காலியாக உள்ளன; ஆறாயிரம் ஆசிரியர் பணி இடங்களில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
துணைவேந்தர் பதவி
தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையும், உயர்கல்வித்துறையும் சீர்குலைந்து கிடக்கும் நிலையில், மூன்று பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பதவியும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. உயர் கல்வித்துறைச் செயலாளர் பதவியும் காலியாக இருக்கின்றது.
தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர் பணி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகின்றது.வேண்டுமென மறுமலர்ச்சி திமுக வலியுறுத்துகின்றது.
சேலம் உருக்கு ஆலை
லாபத்தில் இயங்கும் பொதுத்துறைகளையும் தனியார் மயமாக்கும் திட்டத்தின்படி தமிழ்நாட்டில் இயங்கி வரும் சேலம் உருக்கு ஆலையை தனியாருக்குத் தாரை வார்க்கும் நடவடிக்கையில் மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது. எஃகு உற்பத்திக் கூடம் அமைப்பதற்கு ரூபாய் 2000 கோடி முதலீடு செய்யப்பட்டதால் தற்போது சேலம் உருக்காலை நிறுவனம் கடன் சுமையில் இருக்கின்றது.
தனியாருக்கு தாரை வார்ப்பதா?
மத்திய அரசு இந்நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து, சேலம் உருக்காலையைத் தொடர்ந்து இயங்கிட வழிவகை செய்யாமல், தனியாருக்குத் தாரை வார்க்க முயற்சிப்பது கண்டனத்துக்கு உரியது. தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு சேலம் உருக்காலை நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்தியஅரசின் முடிவை தடுக்க வேண்டும்
திருச்சியில் மாநாடு
இந்த ஆண்டு செப்டம்பர் 15 இல் அறிஞர் அண்ணாவின் 108 ஆவது பிறந்த வாள் விழா மாநாட்டை காவிரி நதிக்கரையில், திருச்சி மாநகரில் சீரும் சிறப்புடனும் வெற்றிகரமாக நடத்துவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.