மநகூவுக்கு முழுக்கு போட்ட மதிமுக பாஜக கூட்டணிக்கு தாவுகிறது?
மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறிய மதிமுக பாஜக கூட்டணிக்கு செல்லக் கூடும் என தெரிகிறது. இதற்காகத்தான் ரூபாய் நோட்டு விவகாரத்தில் விழுந்தடித்துக் கொண்டு மோடியை வைகோ ஆதரித்தார் எனவும் கூறப்படுகிற
சென்னை: மக்கள் நலக் கூட்டணிக்கு முழுக்கு போட்ட மதிமுக அடுத்ததாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தாவக் கூடும் என தெரிகிறது.
மக்கள் நலக் கூட்டணி உதயமானபோது அதிமுக, பாஜக, திமுக, காங்கிரஸ், பாமகவுடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என அறிவிக்கப்பட்டது. ஆனால் சட்டசபை தேர்தலின் போதே அதிமுகவை மென்மையாக விமர்சிப்பதும் திமுகவை மட்டும் காட்டமாக திட்டுவதாக மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் இருந்தனர்.
தேர்தல் முடிந்த பின்னர் அதிமுக, பாஜகவுக்கு மதிமுக பகிரங்கமாக முட்டுக் கொடுத்தது. காங்கிரஸ், திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகளும் காங்கிரஸும் கை கோர்க்க களமிறங்கினர்.
வெளியேறிய மதிமுக
தற்போது ரூபாய் நோட்டு விவகாரத்தில் விடாப்பிடியாக பிரதமர் மோடியை ஆதரித்து வருகிறார் வைகோ. ஆனால் இடதுசாரிகளும் விடுதலைச் சிறுத்தைகளும் கடுமையாக எதிர்க்கின்றனர். இதனால் மக்கள் நலக் கூட்டணியைவிட்டு மதிமுக வெளியேறிவிட்டது.
பாஜகவின் திட்டம்
ஜெயலலிதா இல்லாத நிலையில் அதிமுகவையும் ஆட்சியையும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் வரை அதிமுக அரசை கட்டுப்பாட்டில் வைத்தால் கூட்டணி வைக்க ஏதுவாக இருக்கும் என்பது பாஜக கணக்கு.
மோடியுடன் சந்திப்பு
இதனிடையே வைகோவும் அதிமுக, பாஜகவுக்கு ஆதரவாக கருத்துகளை முன்வைத்து வருகிறார். அவர் அதிமுகவுக்கு ஆதரவாக ஆளுநர் வித்யாசகர் ராவை சந்தித்து பேசி வருகிறார். இந்த நிலையில் திடீரென டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார் வைகோ. ஜல்லிக்கட்டு உள்ளிட்ட விவகாரங்களுக்காகதான் மோடியை சந்தித்ததாக வைகோ கூறினார்.
விரைவில் பாஜக அணியில்?
இருப்பினும் பாஜக கூட்டணியில் இணைவதற்கு முன்னோட்டமாகவே இச்சந்திப்பு நடந்ததாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கனவே மதிமுக இடம் பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.