வைகோவுக்கு தடை: மலேசிய தூதரகத்தை முற்றுகையிட்டு மதிமுகவினர் போராட்டம்!
வைகோவுக்கு தடைவிதிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்தை மதிமுகவினர் முற்றுகையிட்டனர்.
சென்னை: மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு தடைவிதிக்கப்பட்டதற்கு மதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மலேசிய அரசைக் கண்டித்து சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர்.
மலேசியாவின பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதாக மலேசியா சென்றார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அவர் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறி நாட்டிற்குள் நுழைய தடை விதித்தனர்.
இந்த சம்பவம் மதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய அரசின் இந்த நடவடிக்கைக்கு மதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனைக் கண்டித்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மலேசிய தூதரகத்தை மதிமுகவினர் முற்றுகையிட்டனர். கைகளில் கொடியை ஏந்தியப்படி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் மலேசிய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். மதிமுகவினர் முற்றுகைப் போராட்டத்தால் மலேசிய தூதரகம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.