பத்திரிகை, டிவிக்கள் திமுகவிற்கு எதிராக செயல்படுகின்றன: ஸ்டாலின் குற்றச்சாட்டு
தூத்துக்குடி: நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் பிரசாரத்தை மக்கள் தவறாகப் புரிந்து கொண்டதே தோல்விக்குக் காரணம் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். ஊடகங்கள் திமுகவிற்கு எதிராக செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து ஒவ்வொரு மாவட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன்படி நேற்று தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் பேசியது:
தேர்தலில் தோல்வி ஏன்
லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து ஆராயவே இந்த கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. மாதத்துக்கு 10 மாவட்டங்கள் என தொடர்ந்து கூட்டங்கள் நடத்தப்படும்.
தோல்வி மக்களுக்கே
லோக்சபா தேர்தலைப் பொருத்தவரை மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்துள்ளோம். திமுக தோற்கவில்லை. மக்கள்தான் தோற்றுள்ளனர். கட்சி தொடங்கியதிலிருந்து தோல்வியையும், வெற்றியையும் மாறிமாறி சந்தித்துள்ளோம். இருப்பினும், வெற்றிபெறும்போது வெறி கொண்டு அலைவதுமில்லை. தோல்வியுறும்போது துவண்டு போவதும் இல்லை.
சட்டசபை தேர்தல் வியூகம்
நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ளவும், எப்படி வியூகம் அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. கூட்டத்தின்போது, கட்சி நிர்வாகிகள் தங்களது உணர்வுகளை எடுத்துக் கூறினார்கள். திமுகவில் இருப்பது போல ஜனநாயகம் எந்தக் கட்சியிலும் கிடையாது.
தேர்தல் பிரசாரம்
தேர்தல் தோல்விக்கு பல காரணங்கள் உண்டு. லோக்சபா தேர்தலைச் சந்திப்பதற்கு முன்பு திமுக தலைவர் கருணாநிதி கை காட்டுபவர்தான் அடுத்த பிரதமர் என்றும், மதச்சார்பற்ற ஆட்சி அமைய வாக்களிக்க வேண்டும் என்றும் கூறி பிரசாரம் செய்தோம்.
தவறாகப் புரிந்து கொண்டனர்
ஆனால், மதச்சார்பற்ற ஆட்சி என்றவுடன் காங்கிரஸ் ஆட்சி என்றும், திமுக தலைவர் மோடியை கை காட்டுவார் என்றும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதே தோல்விக்குக் காரணம்.
144 தடை உத்தரவு
தேர்தலுக்கு முன்பு 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது ஏன் என தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளோம். தேர்தலில் தனித்துப்போட்டி எனக் கூறிய அதிமுக தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துள்ளது என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.
களங்கம் ஏற்படுத்த முயற்சி
தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் புதிதாக உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட வேண்டும். திட்டமிட்டு திமுக மீது களங்கம் சொல்லப்படுவதால் அதிலிருந்து மீண்டு வர பிரசார வியூகம் அமைக்க வேண்டும்.
ஊடகங்கள் எதிராக உள்ளன
மேலும், ஊடகங்கள், தி.மு.க.விற்கு எதிராக செயல்படுகின்றன.
தி.மு.க. தொண்டர்களுக்கு என தனியாக இணைதளம் தொடங்கப்பட உள்ளது. அதில், தொண்டர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்.
திமுக இணையதளம்
கட்சியின் கொள்கைளை பரப்பவும் கட்சி மீதான தவறான குற்றாட்டுகளை மறுக்கவும் தொண்டர்கள் அந்த இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.