வெள்ளம் பாதித்த பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை, கவுன்சிலிங்... சிறப்பு கையேடு
சென்னை: சென்னையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மழைநீரை வெளியேற்றி தூய்மை பணி முடிவடைந்ததையடுத்து 15 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. நேற்று 262 மாநகராட்சி பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறையுடன் சுகாதாரத் துறையும் இணைந்து 20 சிறப்பு நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு சென்னையில் ஒரு நாளைக்கு 40 பள்ளிகள் வீதம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 28-ந்தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் பெய்த தொடர்மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட வட மாவட்டங்கள் வெள்ளக்காடானது. இதையடுத்து நவம்பர் 8ம்தேதி முதல் 25ம்தேதி வரை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
பின்னர் இயல்புநிலை திரும்பியதையடுத்து, நவம்பர் 26ம்தேதி முதல் 28ம்தேதி வரை பள்ளி-கல்லூரிகள் இயக்கப்பட்டன.செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் நிரம்பி உபரிநீர் திறக்கப்பட்டதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மீண்டும் வெள்ளத்தில் தத்தளித்தன.
பள்ளிகள்-கல்லூரிகளுக்கும் வெள்ளநீர் புகுந்ததையடுத்து நவம்பர் 29ம் தேதி முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. மழை ஓய்ந்து இயல்பு நிலை திரும்பி வந்ததால் டிசம்பர் 9ம்தேதி பள்ளி-கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான பள்ளி-கல்லூரிகளில் மழை தண்ணீர் வடியாமல் இருந்ததால் விடுமுறை டிசம்பர் 13ம்தேதி வரை நீடிக்கப்பட்டது. பள்ளிகளின் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த கடந்த 2 நாட்களாக அனைத்து பள்ளிகளும் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
பள்ளிகள் திறப்பு
சென்னையில் தண்ணீர் முற்றிலும் வடியாமலும், முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நேற்றும் விடுமுறை அளிக்கப்பட்டது.
மழைநீரை வெளியேற்றி தூய்மை பணி முடிவடைந்ததையடுத்து 15 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன.
புத்தகங்கள், சீருடைகள்
நேற்று 262 மாநகராட்சி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், முகாம்களில் தங்காத மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி, ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை, பட்டேல் தெருவில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. அப்போது நிவாரண முகாம்களில் தங்காத மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன. பின்னர் அப்பள்ளியில் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
மருத்துவ முகாம்
தொடர் விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டிருந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மருத்துவ முகாமை அமைச்சர்கள் டாக்டர் சி.விஜய பாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
20 நடமாடும் மருத்துவ குழுக்கள்
பள்ளிக் கல்வித் துறையுடன் சுகாதாரத் துறையும் இணைந்து 20 சிறப்பு நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு சென்னையில் ஒரு நாளைக்கு 40 பள்ளிகள் வீதம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துவக் குழுவில் உள்ள மருத்துவ குழுவினர் மாணவர்களுக்கு சளி, காய்ச்சல், வயிற்றுப் போக்கு, தோல் நோய் போன்ற நோய்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். நோய் தாக்கம் உள்ள மாணவர்களுக்கு சிகிச்சையும், மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது.
மாணவர்களுக்கு கவுன்சிலிங்
தொடர் விடுமுறையால் பொது தேர்வுக்கு முழுமையாக தயாராக முடியுமா? என்று மனக்குழப்பம், பதற்றத்துடன் இருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு மனநல ஆலோசகர்கள், கல்வியாளர்களை கொண்டு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கவுன்சிலிங் அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சான்றிதழ்களுக்கு சிறப்பு முகாம்
மழை வெள்ளத்தால் 10ம் வகுப்பு 12ம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை இழந்தவர்கள் புதிய சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிக்க சென்னையில் 54 பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. அதேபோன்று மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. வெள்ளத்தில் சேதம் அடைந்த மாணவர்கள் கல்வி சான்றிதழ் பெற சிறப்பு முகாம் நேற்றுமுதல் தொடங்கியுள்ளது. 2 வாரம் நடைபெறும் இந்த முகாம்களில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் அவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் கிடைக்கப்பெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தேர்வில் வெற்றிபெற சிறப்பு கையேடு
மேலும், 10ம் வகுப்பு, பிளஸ்2 மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தேர்வை எண்ணி பயப்பட வேண்டாம். தேர்வில் மாணவர்கள் எளிதில் வெற்றி பெற அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி சிறப்பு கையேடு வழங்கப்படும். இதனை படித்தாலே அனைத்து மாணவர்களும் குறைந்தபட்ச வெற்றிக்கான மதிப்பெண்ணை பெற முடியும். இந்த கையேடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது ஆலோசனை
குழுவிலுள்ள சுகாதார ஆய்வாளர்கள் பள்ளி வளாகம் தூய்மையாக இருக்கிறதா என்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டு பள்ளி மாணவர்களுக்கு சோப்பு போட்டு கைகளை கழுவுதல், காய்ச்சிய குடிநீரினை பருகுதல், சுற்றுபுறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் போன்ற பொதுசுகாதார ஆலோசனைகளையும் வழங்குவர்.