மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்படாதது ஏன்?... சுகாதார துறை செயலாளர் விளக்கம்
மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்படாதது ஏன் என்பது குறித்து சுகாதார துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிப்பது குறித்து மத்திய அரசின் முடிவுக்கு பிறகுதான் அறிவிக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நீட் எனப்படும் தேசிய தகுதி காண் தேர்வானது கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு அமல்படுத்தியது. இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வுகள் நடத்தப்பட்டு இளநிலை மருத்துவம் மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.
இதற்கு தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நீட் தேர்வு நடத்தப்பட்டால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவு எட்டாக்கனியாகிவிடும் என்று தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி தமிழக சட்டசபையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் இதுகுறித்து வலியுறுத்தினர். இந்நிலையில் நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம் ஜனாதிபதி பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அது இதுவரை அது மத்திய அரசிடமிருந்து அனுப்பி வைக்கப்படவே இல்லை.
இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தமிழகம், புதுவையைச் சேர்ந்த 88,000 பேர் கலந்து கொண்டனர். பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
எனினும் மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை செயலகத்தில் தெரிவிக்கையில், நீட் தேர்வு தொடர்பான அவசர சட்டம் ஜனாதிபதியின் பரிந்துரையில் உள்ளது.
எனவே அதுகுறித்து முடிவு தெரிந்தவுடன் மருத்துவ விண்ணப்பங்கள் விநியோகிப்பது குறித்து தெரியும். நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு நிச்சயம் விலக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம். முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்கும் என்றார் அவர்.