புதுவை தனியார் கல்லூரிகளில் 778 எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை ரத்து - ஐஎம்சி அதிரடி
புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரிகளில் 770 மாணவர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார், நிகர்நிலை மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் 770 மாணவர்களை வெளியேற்ற இந்திய மருத்துவக்கவுன்சில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்டாக் மூலம் சேர்க்காத இரண்டாம் ஆண்டு மாணவர்களை வெளியேற்றும்படி மருத்துவக்கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள அரசு இடங்களுக்கு கடந்தகாலங்களில் பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் சென்டாக் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வந்தது.
புதுவை தனியார் மருத்துவ கல்லூரிகள் உயர் மருத்துவ படிப்புகள் 50 சதவீத இடங்கள் அரசுக்கு ஒதுக்கப்பட்டன. இதற்கான மாணவர்களை தேர்வு செய்யும் பணி புதுவை உயர் கல்வி மாணவர் தேர்வு அமைப்பான சென்டாக் மூலம் நடந்தது.
இதில், தவறு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து கவர்னர் கிரண்பேடி இதில் தலையிட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். இதனால் அவருக்கும், அமைச்சரவைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
மேலும் மாணவர் சேர்க்கை சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்றம் பிறப்பித்த தனது இடைக்கால தீர்ப்பில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.
இந்த நிலையில் சென்டாக் மாணவர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி இது சம்பந்தமாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி மத்திய உள்துறைக்கு சிபாரிசு செய்தார்.
இந்த முறைகேடு குறித்து விசாரித்த இந்திய மருத்துவ கவுன்சில், தனியார், நிகர்நிலை கல்லூரிகளில் கடந்த ஆண்டு சேர்ந்த 778 மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்துள்ளது.
சென்டாக் மூலம் சேர்க்காத இரண்டாம் ஆண்டு மாணவர்களை வெளியேற்றும்படி மருத்துவக்கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.