இதுதான் புதுச்சேரி... கலாமுக்காக மூடப்பட்ட கடைகள்.. வழக்கம் போல கல்லாக் கட்டிய மதுக் கடைகள்
புதுச்சேரி: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மறைந்த அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடையடைப்பு நடத்தப்பட்டது. தமிழகத்தில் இது முழு அளவில் இருந்தது. புதுச்சேரியிலும் கூட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் அங்கு மதுக் கடைகள் மட்டும் மூடப்படவில்லை.
அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம் இன்று நடைபெற்றது. இதையடுத்து தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்தது. அதேபோல புதுச்சேரி அரசும் பொது விடுமுறை அறிவித்தது.
இதையடுத்து தமிழகத்தில் இன்று அரசு அலுவலகங்கள், பள்ளி,கல்லூரிகள் திறக்கப்படவில்லை. புதுவையிலும் அதேபோல மூடப்பட்டிருந்தன. இரு மாநிலங்களிலும் கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் கூட அடைக்கப்பட்டிருந்தன.
தமிழக அரசு டாஸ்மாக் மதுக் கடைகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்தது. இதனால் மதுக் கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் புதுச்சேரியில் இதற்கு நேர் மாறாக மதுக் கடைகள் வழக்கம் போல திறந்திருந்தன. வியாபாரமும வழக்கம் போல பிசியாக இருந்தது.
உயிரைக் காக்கும் மருந்துக் கடைகள் கூட புதுச்சேரியில் மூடப்பட்டிருந்தன. ஆனால் உயிரைக் குடிக்கும் மதுக் கடைகளைத் திறந்து வைத்திருந்த செயல் மக்களை அதிர வைத்தது.
குடியால் சீரழிந்து வரும் தமிழகத்தில் கூட மதுக் கடைகளை இன்று அடைத்திருந்த நிலையில் புதுச்சேரியில் கடைகளைத் திறந்து வைத்தது மக்களை முகம் சுழிக்க வைத்தது.