பரவுகிறது மருத்துவ மாணவர்கள் போராட்டம்.. நெல்லை, கோவையிலும் போராட்டம்!
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு, கோவை, நெல்லை அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை மாணவ, மாணவிகள் இன்று தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.
நெல்லை: சென்னையில் மருத்துவர்கள் மீது நடைபெற்ற தாக்குதலை கண்டித்து, நெல்லை, கோவையிலும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த விஜய் (24), மேல்மருவத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு படிக்கிறார். சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு மோதலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் அவர் கடந்த 14ம் தேதி சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், விஜய்யை பார்க்க அவரது நண்பர்கள், உறவினர்கள் என 20 பேர் நேற்று மாலை வந்துள்ளனர். நோயாளியைப் பார்க்க கூட்டமாக வந்ததால், பயிற்சி மருத்துவர்கள், மேற்படிப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என நண்பர்கள் தரப்பு கூறியுள்ளது. இதனால், இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதை கண்டித்து மருத்துவ கல்லூரி பயிற்சி மாணவர்கள், சாலை மறியலில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் சென்னையில் டிராபிக் நெரிசல் ஏற்பட்டது.
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு, கோவை, நெல்லை அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை மாணவ, மாணவிகள் இன்று தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.