அடேங்கப்பா தமிழ்நாட்டுல இந்த 'தியானம்' படுறபாடு இருக்கே... எத்தனை வெரைட்டி சாமீகளா
தமிழக அரசியலில் தியானம் என்ற வார்த்தை அநியாயத்துக்கு படாதபாடு படுகிறது,
சென்னை: தமிழகத்தில் தியானம் என்ற வார்த்தை நித்தம் நித்தம் படுகிறபாடுதான் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது.
தியானம், ஆன்மீகம் என்பதெல்லாம் தமிழக அரசியல் களத்துக்கு எதிரானதாகத்தான் இருந்தது. ஆனால் கடந்த ஓராண்டாக தியானம், ஆன்மீகம் இரண்டும் அரசியல் களத்தில் அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது.
முதல்வர் பதவியை சசிகலா பறித்துவிட்டதால் விரக்தியடைந்த ஓபிஎஸ் திடீரென ஜெயலலிதா சமாதிக்கு போய் தியானம் இருந்தார். அன்றில் இருந்து சமாதி தியானம் எனும் புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது.
நள்ளிரவிலும் பீதி
அதிமுகவில் சண்டை, பஞ்சாயத்து என வந்துவிட்டாலே போதும்.. ஓடிப் போய் ஜெயலலிதா சமாதியில் தியானம் இருப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளனர். அதிமுகவில் யார் எந்த நேரத்தில் சமாதி தியானத்துக்கு ஓடுவாங்க என்ற பீதி நள்ளிரவைத் தாண்டியும் நித்தம் நித்தம் நீடிக்கிறது.
தீபா, மாதவன்
இதில் உச்சகட்டமாக குடும்ப பஞ்சாயத்துக்கு தீபாவும் மாதவனும் தியானம் செய்ய சமாதிக்குப் போனதும் வேடிக்கை. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயிலுக்குப் போய் உட்காருவதற்கு முன்னதாக சசிகலா, ஜெயலலிதா சமாதிக்குப் போய் தியானம் ப்ளஸ் சபதம் என அடித்து விளையாடிவிட்டுப் போனார். எம்ஜிஆர் வீட்டுக்கும் எட்டிப் பார்த்து அங்கே ஒரு தியானத்தை போட்டுவிட்டு போனார்.
தலை சுத்திடுச்சு
அதிமுகவினர் ஒரு பக்கம் தியான பீதியை கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில் ஆன்மீக அரசியல் என்கிற அணுகுண்டை வீசினார் ரஜினிகாந்த். அதுவரை ஆன்மீகம் வேற; அரசியல் வேற எனக் கூறி வந்த ரஜினியால் ஆன்மீக அரசியல் என்கிற புதிய நாடகம் அரங்கேற்றப்பட 'ஒரு நிமிசம் தலை சுத்துனதுதான்' மிச்சம்.
விஜயேந்திரர் விளக்கம்
இப்போது மீண்டும் தியான சீசன் தொடங்கிவிட்டது போல... தமிழ்த் தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர், தியானத்தில் இருந்தார்; அதனால் எழுந்து நிற்கவில்லை அடேங்கப்பா விளக்கம் தந்திருக்கிறது சங்கர மடம். தமிழில் பாடிய வாழ்த்து காதில் ஈயத்தை காச்சி ஊற்றியது போல் இருந்திருக்கும் போல; அதனால் தியானம் கலையவில்லை. ஆனால் வங்க மொழியில் பாடப்பட்ட தேசிய கீதத்தைக் கேட்ட உடன் தியானம் கலைந்து டக்கென எழுந்துவிட்டார் போல விஜயேந்திரர்.
பதிலே இப்படித்தானோ
இதையடுத்து இப்போது சமூக வலைதளங்களில், 'தியானத்தில் இருந்தேன்' என்பதே ஹேஷ்டேக்காக உருவெடுத்து டிரெண்டாகி இருக்கிறது. எந்த கேள்வியைக் கேட்டாலும் இனி தியானத்தில் இருந்தேன் என்பதுதான் பதிலாக வரும் போல..
மிடியலையே சாமீகளா!