சென்னையில் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்டினார் மீராகுமார்!
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மீராகுமார் சென்னையி்ல மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இம்மாதம் 25ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது.
பாஜக சார்பில் பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அவிக்கப்பட்டுள்ளார். இதேபோல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் லோக்சபா சபாநாயகர் மீராகுமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இருவரும் ஒவ்வொரு மாநிலமாக சென்று எம்.பி., எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அந்த வகையில் ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் சென்னை வந்தடைந்தார். அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரியுள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை சென்னை வந்த மீராகுமார் எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார். இந்த நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்.பி., எல்ஏக்கள் கலந்துகொண்டனர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராமசாமி, விஜயதாரணி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
முன்னதாக சென்னை விமான நிலையம் வந்த மீராகுமாரை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் ஆகியோர் வரவேற்றனர்.