ஸ்ரீரங்கத்தில் தேர்தல் கால நடவடிக்கை- மதுபான குடோன்களில் சி.சி.டி.வி பொருத்தப்படும் என அறிவிப்பு
திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்லையொட்டி மதுபான குடோன்கள் சி.சி.டி.வி கேமிரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என்று தேர்தல் செலவினப் பார்வையாளர் ஸ்ரீதர் டோரா தெரிவித்துள்ளார்.
மதுபானக் கடைகளின் விற்பனையைக் கண்காணிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தேர்தல் செலவின பார்வையாளர் ஸ்ரீதர் டோரா தலைமையில் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பழனிசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தேர்தல் செலவினப் பார்வையாளர் ஸ்ரீதர் டோரா கூறுகையில்,
"ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குள் 22 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்தக் கடைகளின் அன்றாட இருப்புப் பதிவேடு மதுபான வகைகளின் ரகம் வாரியாக பதிந்து பராமரித்திட வேண்டும்.
சராசரி விற்பனையை விட கூடுதல் விற்பனை எந்தெந்தக் கடைகளில் நடைபெறுகிறது என்பதைக் கண்டறிந்து கண்காணித்திட வேண்டும்.
மதுபானக்கடைகளில் யாரேனும் சலுகை சீட்டுகள், அடையாள சீட்டுகளைக் கொடுத்தாலோ அல்லது மொத்தமாகவோ மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறும் விற்பனையாளர் மற்றும் கண்காணிப்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
இரவு 10 மணிக்கு மேல் மது அருந்தும் எந்த பார்களும் இயங்கக்கூடாது. வெளி மாநில மதுபானங்கள் மாவட்டத்திற்குள் கொண்டு வருவதை தடை செய்திட அனைத்து சோதனை சாவடிகளிலும் காவல்துறையினர் இரவும், பகலும் எந்நேரமும் சோதனை மேற்கொள்ள வேண்டும்.
மதுபானங்கள் மொத்தம் இருப்பு வைத்துள்ள குடோனில் சி.சி.டி.வி மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்" என்று தெரிவித்தார்.