உச்சநீதிமன்றம் 'குட்டு' எதிரொலி- 3 ஆண்டுக்குப் பின் மனித உரிமை ஆணைய தலைவரை நியமித்தது தமிழக அரசு!
தமிழக மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவி கடந்த 3 ஆண்டுகாலமாக காலியாக உள்ளது. மனித உரிமைகள் ஆணையத்தின் பொறுப்பு தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயந்தி செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் எவ்வித நடவடிக்கையையும் எடுக்காததால் மனித உரிமைகள் ஆணையம் தனது கடமையை செய்ய தவறிவிட்டதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை கடந்த செப்டம்பர் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டில் மூன்று ஆண்டு காலமாக காலியாக உள்ள மாநில மனித உரிமை ஆணைய தலைவரை ஏன் இது வரை நியமிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியது. அத்துடன் அப்பதவிக்கு உடனடியாக புதிய தலைவரை நியமனம் செய்யவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று மேகாலயா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான மீனாகுமாரியை, மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக பணி நியமனம் செய்ய தமிழக ஆளுநர் ரோசய்யா ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
5 ஆண்டுகள் அல்லது 70-வயதை எட்டும் வரை அவர் இப்பதவியில் நீடிப்பார் என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, தமிழகம், பீகார் மாநில உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றிய மீனாகுமாரி, 2013ஆம் ஆண்டு மார்ச் 22-ந் தேதி மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்தின் முதலாவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாவர். அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ந் தேதி வரை அப்பொறுப்பு வகித்து ஓய்வுபெற்றார். தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார் மீனாகுமாரி.