நாடு நெருக்கடியான நிலையில் உள்ளபோது மீராகுமாரை ஆதரிப்பது நம் கடமை: ஸ்டாலின்
சென்னை: நாடு நெருக்கடியான நிலையில் உள்ளது. பொது வேட்பாளராக கருதி குடியரசுத் தலைவர் தேர்தலில் மீராகுமாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மீரா குமார் இன்று மாலை சென்னை வந்தார். பின்னர் எம்.ஆர்.சி.நகர் லீலா பேலசில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார்.
காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏக்களிடம் மீராகுமார் ஆதரவு கோரினார். இந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி., எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் எம்.பி டி.கே ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், சமூக நீதியை பாதுகாக்க பொது வேட்பாளராக மீராகுமார் நிறுத்தப்பட்டுள்ளார். நாடு தற்போது நெருக்கடியான நிலையில் உள்ளது. எனவே பொது வேட்பாளராக கருதி மீராகுமாரை வெற்றி பெறச் செய்ய வேண்டியது நமது கடமை. வி.வி.கிரி, கே.ஆர்.நாராயணன், பிரதீபா பட்டீல் ஆகியோர் ஜனாதிபதியாக காரணமாக இருந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
அதனை தொடர்ந்து மீராகுமார் பேசுகையில், கொள்கை அடிப்படையிலேயே கட்சிகள் என்னை ஆதரிக்கின்றன. கடந்த காலங்களில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தல் போல் இது இல்லை. நாம் அனைவரும் கொள்கை ரீதியிலான போட்டியில் இறங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.