தலைப்பாகை அணிவதால் ஹெல்மெட்க்கு “நோ”- மெய்வழி சபையினர் கோரிக்கை!
சேலம்: தலைப்பாகை அணிகின்ற காரணத்தினால் தங்களுக்கு தலைக்கவசமான ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று மெய்வழி சபையினர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றினை அளித்துள்ளனர்.
அம்மனுவின்படி, "கடந்த 115 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மெய் வழி சபையில் சேலம் மாவட்டத்தில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட அங்கத்தினர் உள்ளோம். நாங்கள் எங்களின் கடவுள் வழிகாட்டுதலின் எப்போதும் தலைப்பாகை அணிந்து வருகிறோம். எனவே, எங்களுக்கு தலைக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
ஆனால், சேலம் மாவட்ட மற்றும் மாநகரப் போலீஸார் எங்களையும் தலைக்கவசம் அணிய வேண்டுமெனக்கூறி வற்புறுத்துகின்றனர். மீறுவோர் மீது அபராதம் வசூலிக்கின்றனர். இதுதொடர்பான அரசாணையைக் காண்பித்தாலும் தலைக்கவசம் அணிய வேண்டும் என சிரமப்படுத்துகின்றனர்.
எனவே, தமிழக அரசின் அரசாணையின்படி எங்களுக்கு தலைக்கவசம் அணிவதிலிருந்து விலக்களிக்க உத்தரவிட வேண்டும்" என அதில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து முறையான நடவைக்கை மேற்கொள்ளும்படி மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சம்பத் உத்தரவிட்டுள்ளார்.