மேல்மருவத்தூர் தைபூசம் திருவிழா: நெல்லை- செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்
சென்னை: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி மற்றும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி, நாகர்கோவிலில் இருந்து செங்கல்பட்டுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல கிருஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை கொண்டாட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கவும் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
நெல்லை - செங்கல்பட்டு
நெல்லையில் இருந்து டிசம்பர் 3, 10, 17, 24 மற்றும் 31-ந் தேதிகளில்(வியாழக்கிழமை) பிற்பகல் 3.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் வ.எண்:06134, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும்.
மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து டிசம்பர் 4, 11, 18, 25 மற்றும் ஜனவரி 1-ந் தேதிகளில் (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் வ.எண்:06135, மறுநாள் அதிகாலை 2.15 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
நாகர்கோவில் - செங்கல்பட்டு
நாகர்கோவிலில் இருந்து டிசம்பர் 6 மற்றும் 13ம்தேதிகளில் மாலை 5 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்வ.எண்:06136, அடுத்தநாள் காலை 6.15 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும்.
மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து டிசம்பர் 7 மற்றும் 14ம் தேதிகளில் பகல் 12.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்வ.எண்:06137, அடுத்தநாள் காலை 4.15 மணிக்கு நெல்லையை சென்றடையும்.
கோவை - செங்கல்பட்டு
கோவையில் இருந்து டிசம்பர் 3, 6, 8, 10, 13, 15, 17, 20, 22, 24, 27, 29, 31 மற்றும் ஜனவரி 3, 5, 7, 10, 12, 14, 17, 19 மற்றும் 21ம் தேதிகளில் இரவு 10.50 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்வ.எண்: 06144, மறுநாள் காலை 8 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும்.
மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து டிசம்பர் 4, 7, 9, 11, 14, 16, 18, 21, 23, 25, 28, 30 மற்றும் ஜனவரி 1, 4, 6, 8, 11, 13, 15, 18, 20 மற்றும் 22ம் தேதிகளில் மாலை 5 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் வண்டி எண் 06145, மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு கோவையை சென்றடையும். இந்த ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
மேல்மருவத்தூரில் நிற்கும் எக்ஸ்பிரஸ் ரயில்கள்
இருமுடி, தைப்பூசத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து வரும் சில ரயில்கள் நவம்பர்30 முதல் 2016 ஜனவரி 24ம் தேதிவரை வரை மேல்மருவத்தூரில் ஒருநிமிடம் நிற்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருச்சி மலைக்கோட்டை ரயில், மதுரை வைகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கும். மேலும் சம்பர்கிராந்தி எக்ஸ்பிரஸ், லோகமான்யா திலக் எக்ஸ்பிரஸ், சென்னை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், நிஜாமுதீன் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், சென்னை - மன்னார்குடி எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் - புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் மேல்மருவத்தூரில் நிற்கும்.