142 அடியை நெருங்கும் முல்லைபெரியாறு அணை: 142 பானைகளில் பொங்கல் வைத்த விவசாயிகள்
மேலூர்: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்ட இருப்பதை மதுரை மாவட்டம் மேலூர் பகுதி விவசாயிகள் 142 பானைகளில் பொங்கலிட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
ஒரு போக விவசாயம் மட்டுமே நடைபெறும் மேலூர் பகுதியைச் சேர்ந்த அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் சமூக நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து பெரியாறு வைகை ஒரு போக பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் முருகன் தலைமையில் அனைத்து வியாபாரிகள், மேலுார், மலம்பட்டி, நாவினிப்பட்டி, கொட்டகுடி, வண்ணாம்பாறைபட்டி, தனியாமங்கலம், சூரக்குண்டு, கல்லம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம விவசாயிகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தின் முடிவில் காஞ்சிவனம் கோயிலில் 142 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. 142 பானைகளில் பொங்கல் பொங்கும்போது பெண்கள் குலவையிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குவிக், அணையின் நீர்மட்டத்தை உயர்த்தப் போராடிய விவசாய சங்க நிர்வாகிகள், தமிழக அரசு, வழக்கறிஞர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோருக்கும் மதுரை மேலூர் விவசாயிகள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 தென் மாவட்ட மக்களின் விவசாயப் பணிகளுக்கும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை.
இந்த அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்துள்ளதால் 5 மாவட்ட விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.