5 மணி நேர போராட்டம்.. கதிகலங்கிய ஆட்சியாளர்கள்... கலக்கிய மேலூர் விவசாயிகள்!
மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் விவசாயிகள் நடத்திய 5 மணி நேரப் போராட்டம் நேற்று ஆட்சியாளர்களை கதி கலங்கச் செய்து விட்டது. உண்மையில் விவசாயிகளின் கோபாவேசப் போராட்டம் கலக்கி விட்டது.
வைகை அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாய் மூலமாக மதுரை மாவட்டம் மேலூர் பாசனப் பகுதிகளுக்கு ஒரு போக பாசன நீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை.
இதனால் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். ஒரு போக தண்ணீர் என்பதால் அதையும் திறக்காமல் அலட்சியம் காட்டுவதா என்று கோபமடைந்த அவர்கள் அதிரடியாக சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் உட்கார்ந்தனர். சாலை முழுவதும் விவசாயிகள் நிறைந்தனர்.
சென்னை போக்குவரத்து துண்டிப்பு
சென்னையின் பிரதான சாலை என்பதால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு விட்டதால் காவல்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர். பலத்தைப் பிரயோகித்தால் பெரும் விபரீதமாகி விடும் என்பதால் சென்னைக்கு தகவல் பறந்தது.
ஒரு வண்டி கூட போக முடியவில்லை
சாலையின் இரு புறமும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் தேங்கி விட்டன. யாரும் நகர முடியவில்லை. எந்த வாகனமும் செல்ல முடியாத அளவுக்கு விவசாயிகள் விஸ்வரூபம் எடுத்து வியாபித்து நின்றிருந்தனர்.
பறந்து வந்த உத்தரவு
விவசாயிகளின் போராட்டம் வீறு கொண்டிருக்கும் தகவல் கோட்டையை எட்டியதும் உடனடியாக தண்ணீர் திறந்து விடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். ஒரு வாரத்திற்கு வைகை அணையில் இருந்து கூடுதலாக திருமங்கலம் பிரதான கால்வாயின் வாயிலாக 200 கன அடி அளவும், பெரியாறு பிரதான கால்வாய் வாயிலாக 700 கன அடி அளவும் தண்ணீர் வழங்க உத்தரவிட்டார்.
தற்காலிகமாக வாபஸ்
இதையடுத்து போராட்டத்தை கைவிடுமாறு அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மக்கள் படும் கஷ்டத்தை உணர்ந்து போராட்டத்தை இப்போதைக்கு தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
ஆட்சியாளர்களை ஆட வைத்த 5 மணி நேரம்
கிட்டத்தட்ட 5 மணி நேரம் போராட்டம் நடந்தது. அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை. விவசாயிகள் உறுதியாக இருந்து விட்டனர். தண்ணீரைத் திறந்து விடுங்க, கிளம்பறோம் என்று திட்டவட்டமாக கூறி விட்டனர். கடைசியில் அவர்களது உறுதிதான் வென்றது. இந்த திடீர் போராட்டத்தால் ஆட்சியாளர்கள் ஆடிப் போய் விட்டதாக கூறப்படுகிறது.