கிரானைட் கொள்ளை: பிஆர். பழனிச்சாமியை விடுதலை செய்த நீதிபதி மகேந்திரபூபதி சஸ்பெண்ட்!
மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கில் இருந்து பிஆர்பியை விடுதலை செய்த மேலூர் குற்றவியல் நடுவர் மன்ற மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. புதிய மாஜிஸ்திரேட் ஆக பாரதிராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசு நிலங்களில் சட்ட விரோதமாக கிரானைட் கற்களை அடுக்கி வைத்த வழக்கில் இரண்டு நாட்களுக்கு முன்பு பி.ஆர்.பழனிச்சாமி மற்றும் அவரது சகாக்களை வழக்கில் இருந்து விடுதலை செய்ததோடு, அரசின் சார்பில் வழக்கு தொடுத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அன்சுரல் மிஸ்ரா ,அரசு சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர்கள் ஷீலா மற்றும் ஞான கிரி மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அதிரடியாக தீர்ப்பு சொன்னார் மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி.
இதுதொடர்பாக மதுரை மாவட்ட மேலூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி மீது அடுக்கடுக்கான புகார்களை, கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் டெல்லி உச்சநீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வரை அனுப்பி வந்தனர்.
புகார்கள் அனுப்பியதன் எதிரொலியாக நேற்று மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி பஷீர் அகமது, தலைமை குற்றவியல் நீதிபதி சரவணன் ஆகியோர் மேலூர் நீதிமன்றத்திற்கு வந்தனர்.
வழக்கம் போல மகேந்திர பூபதி நேற்று காலை வழக்குகளை விசாரிக்க ஆரம்பித்துக் கொண்டிருந்தார். நீதிபதியை தலைமை எழுத்தர் மூலம் டயாசில் இருந்து கீழே இறங்கி வரச்சொல்லிவிட்டு, நீதிமன்றத்தில் இருக்கும் கோப்புகளை இரண்டு நீதிபதிகளும் ஆய்வு செய்தனர். இதனால் நேற்று நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இரண்டாவது நாளாக இன்றும் மகேந்திர பூபதி மேலூர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக பதவியேற்ற காலத்தில் இருந்து அவர் கையாண்ட கோப்புக்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். மகேந்திர பூபதியிடம் விசாரணை.
இந்த நிலையில் மேலூர் மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கிரானைட் குவாரி வழக்குகளை விசாரித்த முறைக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மாஜிஸ்திரேட் மகேந்திர பூபதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர பரிந்துரைத்தது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரிந்துரையின் பேரில் 2 நீதிபதிகள் மகேந்திர பூபதியிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் மகேந்திர பூபதியை இடைநீக்கம் செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் சரவணன், பஷீர் அகமது ஆகியோர் நீதிபதி பூபதியிடம் இன்று சஸ்பென்ட் உத்தரவை அளித்தனர்.
மேலூர் குற்றவியல் நடுவர் மன்ற புதிய மாஜிஸ்திரேட் ஆக பாரதிராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழக நீதித்துறை வட்டாரமே பரபரத்துக்கிடக்கிறது.