கலாம் நினைவிடத்தை கட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து செங்கல், மணல் தேவை
ராமேஸ்வரம்: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சமாதி இருக்கும் இடைத்தில் நினைவிடம் அமைக்க அனைத்து மாநிலங்களில் இருந்தும் செங்கல் வரவழைக்கப்பட வேண்டும் என்று அவரது குடும்பத்தார் விரும்புகிறார்கள். மேலும் கலாமின் நினைவிடத்தை வடிவமைப்பது குறித்த போட்டி ஒன்று அறிவிக்கப்பட உள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் ராமேஸ்வரத்தில் உள்ள பேய்க்கரும்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது சமாதி இருக்கும் இடத்தில் நாய், மாடுகள் உலாவி வந்தன. இது குறித்து மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து சமாதி இருக்கும் இடம் சுத்தம் செய்யப்பட்டது.
மாநில அரசு கலாமின் நினைவிடத்திற்கு நிலம் அளித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து கலாமின் பேரன் ஷேக் சலீம் ஒன்இந்தியாவிடம் செல்போனில் கூறுகையில்,
ராமேஸ்வரம்
டிஆர்டிஓ அதிகாரிகள் எங்களை சந்தித்து பேசினார்கள். நினைவிடம் தொடர்பான பணிகளை உடனே துவங்குவதாக அவர்கள் வாக்களித்துள்ளனர். முதலில் சமாதி இருக்கும் இடத்தில் வேலி அமைக்கப்படும்.
மழை
கடந்த இரண்டு நாட்களாக ராமேஸ்வரத்தில் கனமழை பெய்து வருகிறது. அதனால் நினைவிடம் அமைக்கும் வரை தற்போதுள்ள கூடாரத்தை வலுப்படுத்த டிஆர்டிஓ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
நினைவிடம்
கலாம் நினைவிட பணிகள் இன்று துவங்கும் என்று மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் உண்மையில் நினைவிட பணிகள் துவங்க இன்னும் சில மாதங்கள் ஆகும். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் மற்றும் ஹவுஸ் ஆப் கலாம் நினைவிட டிசைனுக்கு ஒப்புதல் அளித்த பிறகே நினைவிட பணிகள் துவங்கும்.
போட்டி
கலாம் மக்களின் குடியரசுத் தலைவர். அதனால் அவரின் நினைவிடத்தை மக்கள் வடிவமைக்க வேண்டும் என்று டிஆர்டிஓ விரும்புகிறது. சமாதியில் வேலி அமைக்கும் பணி முடிந்த பிறகு நினைவிட டிசைன் குறித்த போட்டியை டிஆர்டிஓ அறிவிக்கும். கட்டிடக் கலை நிபுணர்களின் 5 டிசைன்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் ஒன்றை ஏற்போம். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் உண்டு என்று தெரிவித்துள்ளனர்.
செங்கல்
கலாம் நினைவிடம் அமைக்க அனைத்து மாநிலங்களில் இருந்தும் செங்கல், மணலை கொண்டு வருமாறு கலாம் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளோம். நினைவிட குழுவில் எங்கள் ஹவுஸ் ஆப் கலாம் உறுப்பினர் ஒருவர் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அரசுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.