புரையோடிப் போன கள்ளக்காதல்கள்.. ஆண்கள்தான் முதல் குற்றவாளிகள்!
கள்ளக்காதலுக்கு ஆண்களும் ஒருவகையில் காரணமாக இருக்கிறார்கள்.
சென்னை: ஆணும், பெண்ணும் சமம் என்பது கள்ளக்காதல் நிகழ்வுகளுக்கும் பொருந்தும்தானே?
கள்ளக்காதல் என்றாலே பெண்களே பலிகடா ஆக்கப்படுவதும், பெண்களே முதன்மை மற்றும் முக்கிய குற்றவாளிகளாக பார்க்கப்படுவதும் காலங்காலமாகவே நடந்து வருகிறது. இது எப்படி சாத்தியமாகும்?
தன்னந்தனியாக ஒரே ஒரு பெண் கள்ளக்காதலை செய்துவிட முடியுமா? எந்த ஆணின் துணையுமின்றி, ஒத்துழைப்பும் இன்றி ஒரு பெண் கள்ளக்காதலில் ஈடுபட்டாள் என்பது சரித்திரத்திலேயே கிடையாதே. அப்படி இருக்கும்போது எதற்காக பெண்ணையே குத்தம் சொல்லிட்டு இருக்கணும்? ஆண்களும் அந்த பெண்களிடம் சிக்கும்போதோ, அல்லது அவளது காதல்வலையில் விழும்போதோதானே, அதற்கு கள்ளக்காதல் என்றே பெயர் வருகிறது?
மறைபொருளாகவே உள்ளது
இதுபோன்ற கள்ளக்காதலுக்கு எல்லாம் என்னதான் காரணம் சமூக ரீதியாக பார்த்தால், பாலியல் குறித்த ஆரோக்கியமான பார்வை இல்லாததுதான். அதனாலதான், ஒருவர்மீது கூடுதலான எதிர்பார்ப்பும், கூடுதலான கவர்ச்சியும் ஏற்படுகிறது. ஆண்-பெண் கவர்ச்சி ஏற்பட காரணமே, பாலியல் உறவு பற்றிய ஆரோக்கியமான விவாதம் தடுக்கப்பட்டு அது மறைபொருளாகவே வைக்கப்பட்டிருப்பதுதான். அது மட்டுமல்லாமல் இன்றைய இளைஞர்களும், யுவதிகளும் ஆண்-பெண் உறவை பற்றி மிகுந்த அறியாமையிலும், குழப்பத்திலும் சிக்கலிலும் வளர்க்கப்படுகிறார்கள்.
சிக்கி சீரழிகிறார்கள்
சரி, எத்தகைய ஆண்கள் கள்ளக்காதலில் விழுகிறார்கள்? ஒரு சிலர் காமத்தைப்பற்றி அக்குவேறு, ஆணி வேறாக தெரிந்து வைத்திருப்பார்கள். இதனை தன் மனைவியிடம் எதிர்பார்த்து செல்லும் கணவன் ஏமாறும்பட்சத்தில், அவர் அடுத்த பெண்ணை நாடுவது மற்றொரு காரணமாக இருக்கிறது. இது பெண்ணுக்கும் பொருந்தும். சில பெண்கள் தங்கள் கணவன் அழகாக இல்லை என்பதாலோ, அல்லது தங்களின் முன்னாள் காதலர்களை நினைத்து கொண்டோ கணவனிடமிருந்து விலகுகிறார்கள். பிறகு வேறு ஒருவரை தேடி சென்று, அன்பு, அரவணைப்பு கிடைக்கிறதோ இல்லையோ, ஆனால் சிக்கி சீரழிகிறார்கள்.
அன்பை தேடி...
ஆண்களில் இரண்டுவகை உண்டு. ஒன்று பெண்ணின் பலவீனத்தை "புரிந்து கொள்ளாத" ஆண், மற்றொன்று பெண்ணின் பலவீனத்தை "பயன்படுத்தி கொள்ளும்" ஆண். அவ்வளவுதான்! தன் மனைவியை புரிந்து கொள்ளாத கணவன், மனைவி மீது சந்தேகப்படும் கணவன், மனைவியின் அடிப்படை உணர்ச்சிகளைகூட புரிந்து கொள்ளாத கணவன் இருப்பதால்தான், அந்த மனைவி வேறு ஒருவனை நாடி செல்கிறார். வேறு எங்காவது தமக்கு உடல்ரீதியான தேவை உள்ளிட்டவை கிடைக்குமா என தவிக்கிறார். தேடி செல்பவரிடம் எதிர்பார்க்கும் அன்பு கிடைத்துவிடுமா? அந்த அன்பு உண்மையாக இருக்குமா? ஒருவேளை பொய்யான அன்பாக இருந்துவிட்டாலும் அது என்றைக்காவது உண்மையாகிவிடாதா என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து, தன்னையே சூன்யமாக்கி கொள்கிறார். இதற்கு கணவன்மார்களே முதல் காரணம்!
மற்றொரு வகை ஆண்கள்
நாடி வரும் பெண்களின் பலவீனத்தை பயன்படுத்தி கொள்ளும் ஆண்கள் மற்றொரு காரணம். பெண்களை பொறுத்தவரை எல்லோருமே அன்புக்கு ஏங்குபவர்கள்தானே, தங்கள் கணவனிடம் இல்லாத ஒன்றை தங்களிடம் தேடி வருகிறார்களே, கிடைக்காத அன்பு, அரவணைப்பு நம்மிடம் கிடைக்கும் என்று மலைபோல் நம்புகிறார்களே, என்ற எண்ணம்தான் இந்த கள்ளக்காதலை ஊக்குவித்து செல்கிறது. கிடைக்கிறவரை லாபம் என்று செயல்பட்டு பிறகு கழட்டி விட்டு செல்லும் ஆண்கள் குற்றவாளிகள் இல்லையா?
கற்பு பாரம்பரிய பண்பாடு
இப்படி இரு தரப்பு ஆண்களும் பெரும்பாலும் இருக்கப்போய்தான் கள்ளக்காதல் தலைவிரித்து ஆடுகிறது. இதன் விளைவு கடைசியில், கட்டிய கணவனையோ, பெத்த பிள்ளைகளையோ கொல்லவும் துணிகிறது. ஒட்டுமொத்தமாக கள்ளக்காதலில் சமுதாயத்தில் பாதிக்கப்படுவது ஆண்களைவிட பெண்கள்தான்! கற்பு என்பது ஒரு வாழ்க்கை முறை, அது ஒரு பாரம்பரிய பண்பாடு, மனித குலத்தின் தவிர்க்க முடியாத கலாச்சாரம். அதை உடைத்தால் என்ன ஆகும்? சமுதாயமே சிதறி சின்னாபின்னமாகி விடும்.
பாலியல் சாக்கடை
சமுதாயம் என்ற அடித்தட்டின் மீது அமைந்துள்ள குடும்பம் சிதைந்து போகும். மனித குலம் தனித்தனியாக தறிகெட்டு போகும். இத்தகைய போக்கு தொடருமானால் இந்தியா எனும் பழமையும் பண்பாடும் மிக்க தேசத்தில் இளையவர்களின் நிலை என்னவாகும் என்று யோசிக்க கூட முடியவில்லை. இந்த கள்ளக்காதலை சட்டங்கள் போட்டும், கடுமையான நடவடிக்கைகள் எடுத்தாலும் தடுக்க முடியாது. சம்பந்தப்பட்டவர்களின் மனதிலிருந்து பாலியல் சாக்கடை கழிவுகள் தானாகத்தான் வெளியேற வேண்டும். இதற்கு ஒரே வழி கணவன்-மனைவி அன்பு மட்டுமே. புரிதல் மட்டுமே!!