பெண்ணை கீழே தள்ளி விட்ட திருடர்கள்.. தாலி பறித்தபோது தவறி ஜாக்கெட்டுக்குள் விழுந்ததால் ஆத்திரம்
இன்ஸ்பெக்டர் மனைவியின் சங்கிலியை பறிக்க முயன்ற போது சங்கிலி கையில் கிடைக்காததால் அவரை கீழே தள்ளியதில் படுகாயம் அடைந்தார்.
சென்னை: இன்ஸ்பெக்டர் மனைவியின் சங்கிலியை கொள்ளையர்கள் பறிக்க முயன்ற போது செயின் கையில் கிடைக்காத கடுப்பில் கொள்ளையர்கள் அவரை கீழே தள்ளி விட்டு தப்பிச் சென்றனர். இதனால் அந்தப் பெண் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ரவிச்சந்திரன். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கோபாலபுரத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். கஸ்தூரி அருகில் உள்ள பாரத் ஸ்கேன் சென்டரில் பணி புரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் கஸ்தூரி வேலையை முடித்து விட்டு இரவு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் அவர் சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் 2 மர்ம நபர்கள், கஸ்தூரியின் அருகில் சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். அப்போது சங்கிலி அறுந்து அவருடைய ஜாக்கெட்டின் உள்புறமாக விழுந்துவிட்டது. இதனால் கொள்ளையர்களின் கையில் சங்கிலி சிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் கஸ்தூரியை கீழே தள்ளிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த கஸ்தூரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராயப்பேட்டை போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயப்பேட்டை பகுதியில் அடிக்கடி செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனை கட்டுப்படுத்தி இந்தப் பகுதியில் உள்ள பெண்கள் அச்சமின்றி வெளியில் சென்று வரும் வகையில் போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று இப்பகுதி பெண்கள் வலியுறுத்துகின்றனர்.