பரமக்குடியில் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்காவிட்டால் சாலை மறியல்: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு
ராமநாதபுரம்: பரமக்குடியில் அமைந்துள்ள மதுரை-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்காவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று எஸ்டிபிஐ கட்சி அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள மதுரை-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை கடந்த சில தினங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டு அதன் மீது புதிய தார் சாலை போடப்பட்டது.
ஆனால் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பெய்த மழையினால் சாலை மீண்டும் பழுதானது. சாலையின் நடுப்புறம் பெயர்ந்து மண்போல் காட்சி அளித்தது. அதாவது புதிதாக போடப்பட்ட சாலையின் நடுப்பகுதியில் ஜல்லிக்கு பதிலாக மணலை பரப்பி அதன் மீது தார் ஊற்றப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
பழுதடைந்த சாலைக்கு அருகில் தான் அமைச்சர் சுந்தர்ராஜன் அவர்களின் மருத்துவமனையும் உள்ளது. அமைச்சரின் மருத்துவமனை அருகிலேயே மோசமான முறையில் சாலை பணி நடைபெற்றது பொதுமக்களிடையே அதிருப்தியை உண்டாக்கியது.
இந்நிலையில் சாலையை மறு ஆய்வு செய்ய வேண்டும், ஒப்பந்தக்காரரையும், அனுமதி கொடுத்த அதிகாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். மீண்டும் சாலையை சீரமைக்க வேண்டும். தாமதமானால் பொதுமக்களை திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவோம் என எஸ்.டி.பி.ஐ கட்சியினர் அறிவித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் பழுதடைந்த சாலை தோண்டப்பட்டு மணல் கலவை அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.