நாமக்கல் அருகே அனுமதியின்றி செயல்பட்ட மனநல காப்பகத்துக்கு சீல் - சிறுவர்கள் உள்ளிட்ட 8 பேர் மீட்பு
நாமக்கல் அருகே அனுமதியின்றி செயல்பட்டுவந்த மனநல காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
நாமக்கல்: நாமக்கல் அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த மனநல காப்பகத்தை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள், அங்கிருந்த சிறுவர்கள் உள்பட 8 பேரை மீட்டனர்.
நாமக்கல் மாவட்டம் அருகில் உள்ளது பொட்டிரெட்டிப்பட்டி கெஜகொம்பை கிராமம். இங்கு ராணி என்கிற எப்சிபா என்பவரின் வீட்டில் அனுமதியின்றி மனநல காப்பகம் நடத்தி வருவதாக மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியத்துக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்படி, மாவட்ட மாற்று திறனாளிகள் நலஅலுவலர் சுப்ரமணி மற்றும் அலுவலர்கள், நேற்று எப்சிபாவின் மனநல காப்பகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஒரு ஓட்டு கட்டடத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 8 பேரை தங்க வைத்துள்ளது கண்டறியப்பட்டது. மேலும் அவர்களுக்கு உணவு மட்டும் வழங்கப்பட்டு வருவதும், ஆனால் போதுமான சுகாதார வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என ஆய்வின்போது தெரியவந்தது.
ஒரே அறையில் தரையில் 8 பேரும் படுத்து தூங்குவதும், அவர்களை கவனித்துக்கொள்ள உதவியாளர் யாரும் இல்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மனநலகாப்பகம் நடத்த அரசின் முறையான அனுமதி எதுவும் பெறவில்லை.
இதையடுத்து 8 பேரையும் அதிகாரிகள் மீட்டனர. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அனுமதியின்றி செயல்பட்டு வந்த மனநல காப்பகத்தை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.