விவசாயிகளுக்காகப் போராடிய மாற்றுத்திறனாளி குழந்தைகள்!- வீடியோ
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்காக பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள் போராடி வருகின்றன. இந்நிலையில் சேலத்தில் மாற்றுத்திறனாளிகளும் விவசாயிகளுக்காகப் போராட்டம் நடத்தினர்.
சேலம்: டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சேலத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளும் பெரியவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் தலையை மொட்டை அடிப்பது, தலைகீழாக நிற்பது, குட்டிக்கரணம் அடிப்பது, தரையில் சோறு சாப்பிடுவது உள்ளிட்ட பல்வேறு முறைகளில் நூதனப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளை பிரதமரை சந்திக்க வைக்கிறோம் என்று கூட்டி சென்று வெறும் மனுக்களை மட்டும் பெற்றுக்கொண்டு அனுப்பியது டெல்லி போலீஸ். இதனால் விரக்தியும் கோபமும் அடைந்த விவசாயிகள் டெல்லி சாலையில் நிர்வாணமாக ஓடினர்.
இது தமிழகம் மட்டுமில்லாது இந்தியா முழுக்க மக்கள் மத்தியில் கோபத்தை உருவாக்கியது. அதிலிருந்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் சேலத்தில் இயங்கும் மாற்றுத்திறனாளிகள் சேவை நிறுவனம், அங்கிருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் பெரியவர்களையும் கொண்டு போராட்டம் நடத்தியது. விவசாயிகள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு என்பதை உணர்த்தவே இந்த போராட்டத்தை நடத்தியதாக அவர்கள் கூறினார்கள்.