குறைந்த காற்றழுத்தம் தீவிரம் அடைந்தது- தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்று அறிவிப்பு
சென்னை: வங்க கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகிறது. இதனால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருந்தது.அது இப்போது வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகி தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ளது.அது மேலும் தீவிரம் அடைந்து தாழ்வு மண்டலமாக மாற உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சியின் மண்டல இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:
தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று தீவிரம் அடைந்துள்ளது. அது இன்னும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.
ஏற்கனவே வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று தூரத்தில் உருவாகி இருந்தது. அதுவும், இப்போது உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் ஒன்றாக சேர்ந்துள்ளன. இவை இரண்டும் சேர்ந்து அடுத்த 24 மணி நேரத்திற்குள் தாழ்வு மண்டலமாக மாறும்.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யும். இந்த மழை அல்லது கனமழை சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும் பெய்யும்.
சென்னையில் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.