தென்தமிழகத்தில் ஜில் மழை... வட தமிழகத்தில் சுள் வெயில்- வானிலை மையம்
தென் தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. வட தமிழகத்தில் வறண்டவானிலையே நிலவும் என்று கணித்துள்ளது.
சென்னை: வரும் 3 நாட்களுக்கு உள் தமிழகம், மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது. மேலும் வடதமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்று கணித்துள்ளது.
லட்சத்தீவு முதல் கர்நாடகம் வரை காற்றின் மேலடுக்கில் சாதகமான சூழல் உருவாகியுள்ளதன் காரணமாக தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது. செவ்வாய், புதன்கிழமைகளில் வெயில் சுள்ளென்று சுட்டெரித்த நிலையில் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
காற்றழுத்தத் தாழ்வுநிலை தற்போது சற்று நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல், இலங்கையை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடலின் அருகில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போல காலை முதலே மழை பெய்து வருகிறது.
ஜில்லென பெய்யும் மழை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்தூரில் மழை கொட்டியது. தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் அரை மணி நேரமாக கனமழை பெய்து பெய்தது வல்லம், திருக்கானூர்பட்டி, மாதாக்கோட்டை உள்ளிட்ட ஊர்களில் மழை பெய்து வருகிறது.
வெப்பம் தணிந்தது
காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் காலை முதலே மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் நகரிலும் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. மதுரை, அருப்புக்கோட்டையிலும் மழை பெய்து வெப்பத்தை தணித்தது.
3 நாட்களுக்கு மழை
இதனிடையே தென் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. உள் தமிழகம், மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வறண்ட வானிலை
வடதமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவித்துள்ளது. சென்னையில் வர்தா புயலுக்குப் பின்னர் கடந்த 2 மாதங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. காற்றழுத்த தாழ்வுநிலையால் சின்ன தூறல் கூட சென்னையை நனைக்கவில்லை. வெயில் பங்குனி மாதம் போல பட்டையை கிளப்பி வருகிறது.