புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் யாரும் வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதனால், மீனவர்கள் யாரும் வடக்கு, மத்திய வங்கக் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கை தெரிவிக்கப்படுகிறது.
வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், நீலகிரி, தேனி, கோவை, மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை, தமிழகம், புதுச்சேரியின் இதர பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.