அக்னி நட்சத்திரமும்... கோடை மழையும்...: வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் விளக்கம்
சென்னை: அக்னி நட்சத்திர காலம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஒரு பக்கம் மண்டையை பிளக்க சில இடங்களில் மழையும் கொட்டி வருகிறது. அக்னி நட்சத்திரம் பற்றியும், கோடைமழை பற்றியும் விளக்கம் அளித்துள்ளார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன்.
வானிலை துறையில் அக்னி நட்சத்திரம் அல்லது கத்தரி வெயில் என்ற சொல்லே இல்லை. மே மாதம் இயல்பான கோடை காலம்தான் என்றும் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வானியல் சாஸ்திரம் அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் மே முதல்வாரத்தில் தொடங்கி 26 நாட்கள் நாட்கள் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தாண்டு மே 4ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை கத்தரி வெயில் கொளுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வானியல் சாஸ்திரம் அடிப்படையில் சொல்லப்படும் அக்னி நட்சத்திர காலத்துக்கு பிறகும் சில ஆண்டுகள் வெயில் கொளுத்தியிருக்கிறது. இந்த ஆண்டு இரு மாதங்களாகவே அக்னி நட்சத்திர காலத்தை விட மிக மோசமாகவே வெயில் கொளுத்தியுள்ளது.
இதற்கு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் அளித்துள்ள விளக்கத்தை படியுங்களேன்.
அக்னி நட்சத்திரம்
வானிலை துறையில் ‘அக்னி நட்சத்திரம்' அல்லது ‘கத்தரி வெயில்' என்ற சொல்லே இல்லை. மே மாதம் இயல்பான கோடை காலம்தான். வானிலை தகவல்களை பெற்று, வரைபடம் தயாரித்து, வானிலை விதிகள் அடிப்படையில் வெப்ப நிலையைக் கணிக்கிறோம்.
வெப்ப சலனம்
பொதுவாக மே மாதம் கடும் கோடை காலம் என்பதால், இந்த மாதத்தில்தான் வெப்பச் சலனம் அதிகமாக ஏற்படும். சூரிய ஒளி பூமி யில் விழுந்து பூமியில் உள்ள காற்று வெப்பமடையும். அப்போது காற்று விரிவடைந்து அதன் அடர்த்தி குறையும். அந்த நேரத்தில் மேல் நோக்கி எழும் காற்றில் ஈரப்பதம் இருந்தால் வெப்ப சலனம் உருவாகி மழை பெய்யும்.
கோடை மழை
கோடை மழை பொழிவதற்கு மூலகாரணமே வெப்பச் சலனம்தான். பருவ காலங்கள் மாறும்போது, அதாவது, தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும்போதோ, கோடைகாலம் முடிவடைந்து பருவமழை காலம் தொடங்கும் போதோ வெப்பச் சலனம் ஏற்படும்.
பருவகால மாற்றங்கள்
பூமி சூரியனைச் சுற்றி வரும் போது பருவகாலம் வருகிறது. அதாவது கோடைகாலம், குளிர்காலம், இளவேனில் காலம் போன்றவை பூமிக்கும் சூரியனுக்குமான இடைப் பட்ட தூரத்தைப் பொறுத்து அமையும் பருவ காலங்களாகும். பூமியில் இருந்து பார்க்கையில், சூரியன் வடக்கு நோக்கி நகரும்போது சூரிய ஒளி பூமியில் நேரடியாக விழுகிறது. அப்போது வெப்பம் அதிகமாக இருக்கும்.
காற்றின் ஈரப்பதம்
இந்த அடிப்படை நிலையில் மற்ற மாற்றங்கள் நிகழும்போது வெப்ப அளவும் மாறுபடும். ஒரு இடம், கடல் பகுதியில் அமைந்திருக்கிறதா, மலைப் பகுதியில் இருக்கிறதா, அங்கே காற்று எவ்வளவு நேரம் வீசுகிறது? எந்த திசையில் இருந்து காற்று வீசிக் கொண்டிருக்கிறது? காற்றில் எவ்வளவு ஈரப்பதம் உள்ளது என்பன போன்ற பல்வேறு விஷயங்களைப் பொறுத்தே வெப்ப அளவு வேறுபடும்.
வெப்பக்காற்று
காற்றின் மூலங்கள்தான் (Heat Sources) அதன் போக்கைத் தீர்மானிக்கின்றன. பூமியில் இருந்து வெப்பக் காற்று மேல்நோக்கி செல்வது, கதிர்வீச்சு, காற்றின் உள்ளுறை வெப்பம் உள்ளிட்டவை காற்றின் மூலங்களாகும்.
வெப்பநிலை உயரும்
பொதுவாக மே மாதத்தில் கட லோரப் பகுதிகளில் இயல்பைவிட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரையிலும், உள் மாவட்டங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையிலும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் வானிலை ஆய்வுமைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன்.