2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும், பகலில் வெளியே போகாதீர்கள்- வானிலை மையம் எச்சரிக்கை
நெல்லை: தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க இருப்பதால் இன்றும், நாளையும் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் வெளியே செல்லாதீர்கள் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்க கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. இந்தியாவில் பல நகரங்களில் வெப்ப நிலை அதிகரித்து வருகிறது. இதனால் கோடை வெயிலால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் பல மாநிலங்களில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து தண்ணீர் பஞ்சம் தலை தூக்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதம் ஓரளவு மழை பெய்ததால் தண்ணீர் பஞ்சம் சமாளிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஓரு மாத காலமாக இங்கும் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மே 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரத்தின் ஆதிக்கம் தொடங்குகிறது. அன்று முதல் 28 ஆம் தேதி வரை இது நீடிக்கும் என கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இதனை கருத்தில் கொண்டு வானிலை ஆய்வு மையத்தினர் மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை செய்து வருகின்றனர். பகல் 12 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என்றும், அப்படி செல்ல இருந்தால் தகுந்த பாதுகாப்பு சாதனம் இல்லாமல் செல்ல கூடாது எனவு்ம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது 104 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ள நிலையில் இது மேலும் உயரக் கூடும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.