மெட்ரோ ரயில் பணியில் இருந்து வெளியேற்றப்பட்ட கேமின்… 2500 வட மாநில தொழிலாளர்களின் கதி என்ன?
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொண்டு வந்த கேமின் நிறுவனம் அப்பணியில் இருந்து திடீரென வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால், மெட்ரோ ரயில் பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திடீரென வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் இதுநாள்வரை பணிபுரிந்து வந்த 2,500 வடமாநில தொழிலாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.
சென்னை மாநகரின் போக்கு வரத்து வசதிக்காக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் இருவழி பாதைகளில் மொத்தம் 45 கி.மீ தூரத்துக்கு கடந்த 2009 ம் ஆண்டு முதல் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன்படி வண்ணாரப் பேட்டையில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையத்துக்கும், மற்றொரு வழியில் சென்ட்ரல், கோயம்பேடு, ஆலந்தூர் வழியாக பரங்கிமலைக்கும் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. முதற்கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை 10 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதைகள்
மே தின பூங்காவில் இருந்து சைதாப்பேட்டை வரையில் மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்கும் பணிகளை கேமின் நிறுவனமும், சுரங்கப் பாதைகளை அமைக்கும் பணியை மாஸ் மெட்ரோ என்ற ரஷ்ய நிறுவனமும் செய்துவந்தன. சுரங்கம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்த மாஸ் மெட்ரோ நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியேறியது. இதையடுத்து, சுரங்கம் தோண்டும் பணியையும், ரயில் நிலையங்களை அமைக்கும் பணியையும் கேமின் நிறுவனம் மேற்கொள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
வடமாநில தொழிலாளர்கள்
இதில், சுமார் 2,500 வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நந்தம்பாக்கம் மற்றும் அண்ணாசாலை அருகே உள்ள சிவானந்தா சாலையில் தற்காலிக குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையில் இந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கேமின் நிறுவனம் வெளியேற்றம்
இந்நிலையில் குறிப்பிட்ட காலத்துக்குள் பணியை முடிக்காததால், கேமின் நிறுவனத்தை மெட்ரோ ரயில் பணியில் இருந்து வெளியேற்ற மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதனால், மே தின பூங்காவில் இருந்து சைதாப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மெட்ரோ ரயில் தொழிலாளர்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை. சுமார் 2,500 தொழிலாளர்கள் நேற்று தங்களின் குடியிருப்புகளிலேயே இருந்தனர்.
புதிய நிறுவனம்
மெட்ரோ ரயில் பணிகளை திட்டமிட்ட காலத்துக்குள் முடிக்க கேமின் நிறுவனத்துக்கு உத்தரவிட்டோம். ஆனால், அவர்கள் குறித்த காலத்தில் பணியை மேற்கொள்ளவில்லை. இதனால், அந்நிறுவனம் வெளி யேற்றப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகளை வேறொரு நிறுவனம் மேற்கொள்ள உள்ளது என்று உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேமின் நிறுவன தொழிலாளர்கள்
பீகார், அசாம், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள் கடந்த 2 ஆண்டுகளாக சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளை செய்து வருகின்றனர். கேமின் நிறுவனத்தின் கீழ் சுமார் 2,500 தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் அவர்களை திடீரென பணிக்கு வரவேண்டாம் என்று அதிகாரிகள் கூறவே தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
தகவல் இல்லை
கேமின் நிறுவனத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியேற்றி யிருப்பதாக காலை 10 மணிக்கு பிறகுதான் தகவல் தெரிந்தது. ஆனால், எங்கள் மேற்பார்வையாளர்கள் இதுவரையில் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. நாங்கள் தற்போது மெட்ரோ ரயில் பணியில் இருக்கிறோமா? இல்லையா? என்பது கூட எங்களுக்குத் தெரியவில்லை'' என்று கூறியுள்ளனர்.
2 மாத சம்பள பாக்கி
எங்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. எங்களின் பிரச்சினை குறித்து பேச சங்கம் அமைத்து கொள்ளவும் உரிமை இல்லாத நிலையில் தான் இருக்கிறோம் என்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாரிடம் சொல்வது?
எங்கள் கோரிக்கைகள் குறித்து இங்குள்ள தொழிலாளர் நலத்துறையிடமோ, அரசியல்கட்சிகளிடமோ கூறுவதற்கு மொழி பெரிய தடையாக இருக்கிறது. இருப்பினும், இங்கு பணி இல்லை என அறிவித்துவிட்டால், சென்னையிலேயே வேறு இடத்தில் பணியாற்றவும் நாங்கள் தயாராகவுள்ளோம் என்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.