சிக்கு புக்கு சிக்கு புக்கு மெட்ரோ ரயிலு… 1 வாரத்தில் 1.08 கோடி வசூல்
சென்னை: வார விடுமுறை நாட்களில் ஷாப்பிங் மால், பீச் என படையெடுக்கும் சென்னைவாசிகள் இந்தவாரம் குடும்பம் குடும்பமாக சென்ற மெட்ரோ ரயில் நிலையத்திற்குத்தான். எவ்ளோ அழகா இருக்கு? நல்லா இருக்குல்ல என்று கூறியபடியே டிக்கெட் எடுத்து கோயம்பேடு ரயில் நிலையத்தில் நகரும் மின் ஏணியில் பாட்டி முதல் பேத்தி வரை ஏறிச் சென்று குளு குளு மெட்ரோ ரயிலில் ஆலந்தூர் வரை சென்று சும்மா வாச்சும் சுத்தி வந்தார்கள். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் சுற்றுவட்டார மக்களின் அமோக ஆதரவினால் முதல் வாரத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ரூ.1.08 கோடி வசூலாகியுள்ளது.
கடந்த 29ம் தேதி ஆலந்தூர் - கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்கிவைத்தார் முதல்வர் ஜெயலலிதா. 10 கிலோ மீட்டர் தூரம் நகரின் மத்தியில் பறந்து செல்லும் ரயிலில் நகரத்தின் அழகை ரசித்துக்கொண்டே பயணிக்கலாம்.
அரசியல் தலைவர்கள் பயணம்
மு.க.ஸ்டாலின், விஜயகாந்த் என அரசியல் தலைவர்களும் மெட்ரோவில் பயணிக்கவே சென்னைவாசிகளின் ஆர்வம் அதிகரித்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் என பல அரசியல்கட்சியினரும் சென்னை மெட்ரோவில் பயணித்து தங்களின் அனுபவங்களை பேசியதோடு கட்டணக்குறைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினர்.
சரத்குமார் பயணம்
சமத்துவக்கட்சித் தலைவர் சரத்குமார், மெட்ரோவில் பயணித்த கையோடு, மெட்ரோ ரயில் திட்டம் நல்ல திட்டம். முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில்தான் இத்திட்டம் முழுமை அடைந்துள்ளது. தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு ரயில் விடப்பட்டுள்ளது. இதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றார்.
குடும்பத்தோடு வருவேன்
கட்டணம் அதிகமாக உள்ளது. இதை குறைக்க முதல்வர் விரைவில் நடவடிக்கை எடுப்பார். இது புது பயணமாகவும் சொகுசாகவும் இருந்தது. இதை முறையாக பராமரிக்க வேண்டும். மீண்டும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வருவேன். அப்போது குடும்பத்துடன் வருவேன் என்றார்.
அமோக ஆதரவு
மெட்ரோ ரயிலில் ஏசி வசதியுடன் கூடிய பயணம், பாதுகாப்பு மற்றும் சிறப்பு அம்சங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மெட்ரோ ரயில்சேவை தொடங்கிய முதல் நாளன்று மட்டுமே 40 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். இதன்மூலம் ரூ.17 லட்சம் வசூலானது. அடுத்த 3 நாட்களில் தலா 30 ஆயிரம் பேர் பயணம் செய்தனர்.
விடுமுறை தினங்களில் கூட்டம்
சனி மற்றும் ஞாயிறுகளில் மக்கள் கூட்டம் மெட்ரோ ரயில் நிலையங்களில் அலைமோதியது. சுற்றுலாத்தலத்தை பார்க்க வருவது போல், மக்கள் குடும்பத்துடன் திரண்டு வந்து மெட்ரோ ரயில் நிலையங்களை பார்த்தனர். பின்னர், மெட்ரோ ரயில்களில் மகிழ்ச்சியான பயணத்தை மேற்கொண்டனர்.
1.08 கோடி வசூல்
சனிக்கிழமை 50 ஆயிரம் பேர் பயணம் செய்தனர். இதனால் ரூ.20 லட்சம் வசூலானது. ஞாயிற்றுகிழமை அதிகபட்சமாக 73,000 பேர் பயணம் செய்தனர். இதனால் ரூ.28 லட்சம் வசூலானது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய 7 நாட்களில் மொத்தம் ரூ.1.08 கோடி வசூலாகியுள்ளது என்று மெட்ரோ ரயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
45 கிலோ மீட்டர்
சென்னை மெட்ரோ ரயில் பணி கடந்த 2009ம் ஆண்டு தொடங்கிய 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில், 24 கி.மீ தூரத்துக்கு (19 ரயில் நிலையங்கள்) சுரங்க வழிப்பாதையாகவும், 21 கி.மீ தூரத்துக்கு உயர்மட்ட ரயில்பாதைகள் (13 ரயில் நிலையங்கள்) அமைத்து இயக்கப்படவுள்ளது.
சுரங்கப்பாதை எப்படி?
பறக்கும் ரயிலில் 10 கிலோமீட்டர் தூரம் பயணிக்கவே மக்கள் கூட்டம் கூட்டமாக குவிகின்றனர். சென்னை எழும்பூர் - திருமங்கலம் இடையேயான சுரங்க வழித்தடத்தில், 2016 மார்ச் மாதம் மெட்ரோ ரயில் சேவையை துவக்கும் வகையில் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டால் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
ஷாப்பிங் மால்கள்
மெட்ரோ ரயில் வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இனி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகிலேயே ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள் துவங்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை.