ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை மெட்ரோ ரயிலில் கட்டணம் அறிவிப்பு: குறைந்த பட்ச கட்டணம் ரூ.10…
சென்னை: சென்னைவாசிகளின் நீண்ட நாள் கனவான மெட்ரோ ரயில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே முதற்கட்டமாக இன்று தொடங்கப்பட உள்ளது. ஆலந்தூர் - கோயம்பேடு இடையே கட்டணம் குறைந்த பட்ச கட்டணமாக ரூ.10ம் அதிகபட்சமாக ரூ.40ம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் ஒவ்வொன்றும் 4 பெட்டிகளை கொண்டது. ஒரு ரயிலில் 1,276 பேர் வரை பயணிக்கலாம். காலை 6 மணி முதல் இரவு பத்து மணிவரை 192 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த மெட்ரோ ரயிலில் தடையற்ற மின்சார வசதி, ஏசி வசதி, தானியங்கி கதவுகள், அவசரகால தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு நவீனவசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையங்களும் அனைத்து நவீனவசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. சுத்தமாக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள், கேன்டீன் வசதி, ஏடிஎம் மையங்கள், சுத்தமான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
கட்டணம் எவ்வளவு
ஆலந்தூர் - கோயம்பேடு இடையே கட்டணம் குறைந்த பட்ச கட்டணமாக ரூ.10ம் அதிகபட்சமாக ரூ.40ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆலந்தூர் முதல் ஈக்காட்டுந்தாங்கல் வரை ரூ.10 வசூலிக்கப்படுகிறது. ஆலந்தூர் முதல் அசோக் நகர் வரை ரூ.20ம் ஆலந்தூர் முதல் வடபழனி வரை ரூ.30ம் ஆலந்தூர் முதல் அரும்பாக்கம், ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலும் ரூ. 40 கட்டணம் நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்பு கட்டணமாக இருமடங்கு வசூலிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
டிக்கெட் ரொம்ப முக்கியம்
சாதராண மின்சார ரயில்களைப் போலவும், பறக்கும் ரயில்களைப் போலவும் டிக்கெட் எடுக்காமல் பயணிக்க முடியாது. ரயில் நிலையத்தில் டிக்கெட்டை காண்பித்தால் தான் கதவுகள் திறக்கும்.
மூன்று விதமான டிக்கெட்டுக்கள்
அதே நேரத்தில் தினசரி பயண டிக்கெட், நிரந்தர பயண டிக்கெட், சுற்றுலா குரூப் டிக்கெட் என மூன்று விதமாக டிக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிரந்தர டிக்கெட்டின் விலை ரூ.50 முதல் 300 வரை உள்ளது. இது ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் உள்ளதாக கூறப்படுகிறது.
டிக்கெட் ரீசார்ஜ் வசதி
அதாவது நிரந்தர டிக்கெட் வாங்கியவர்கள் அவ்வப்போது ரயில் பயணம் செய்யும்போது, மீதமுள்ள தொகை நிலவரத்தை ரயில் நிலையங்களில் உள்ள இயந்திரத்தில் தெரிந்து கொள்ளலாம். தொகை காலியானதும் அங்குள்ள ரீசார்ஜ் இயந்திரத்தில் பணம் அல்லது ஏடிஎம் கார்டு பயன்படுத்தி நமக்கு தேவையான அளவு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. குரூப் சுற்றுலா டிக்கெட்டில் 20 பேர் வரை பயணம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
சென்னைவாசிகளின் கனவு
மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்க வேண்டும் என்றும் கடந்த பல மாதங்களாக எதிர்கட்சியினர் வலியுறுத்தி வந்த நிலையில் இன்றைய தினம் மெட்ரோ ரயில் திட்டத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கிவைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. நேரடியாக துவக்கி வைக்க வந்தால் அதிமுகவினரால் சென்னை நகரம் மீண்டும் மெர்சலாகிவிடும் என்றுதான் என்னவோ வீடியோ கான்பரன்சிங் மூலம் மெட்ரோ ரயிலை துவக்கி வைக்கிறார் ஜெயலலிதா.